தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமானிய மக்களை குறிவைக்கும் ஜிஎஸ்டி மோசடி கும்பல்.. மூதாட்டிக்கு வந்த கடிதத்தால் ஆம்பூரில் பரபரப்பு!

ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் மூதாட்டிக்கு ரூ.2 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரம் வரி செலுத்த கோரி வந்த ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கடிதம் சாமானிய மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிபாபுவின் மகன் சங்கர் மற்றும் ராணிபாபு
ராணிபாபுவின் மகன் சங்கர் மற்றும் ராணிபாபு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 10 hours ago

திருப்பத்தூர்:நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதையடுத்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விற்பனையில் பெரும் பங்கு வகிக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் பெரும்பாலானோர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அடிப்படை கல்வி மற்றும் டிஜிட்டல் உலகத்திற்கு பழக்கமில்லாதவர்கள்.

மேலும் இவர்களில் பெரும்பாலானோர் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றுவதன் மூலமாக கிடைக்கும் மாத வருமானமான பத்தாயிரம் ரூபாயில்தான் தங்களது வாழ்க்கையை நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், ராணிபாபு என்ற மூதாட்டி தனது கணவனை இழந்த நிலையில், தனது மகனான சங்கர் என்பவருடன் ஆம்பூரில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள காமராஜர் சாலை 3வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

ராணிபாபுவின் மகன் சங்கரின் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுமட்டும் அல்லாது, மூதாட்டி ராணிபாபு பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில், துப்புரவு பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, திருச்சியில் ராணிபாபு மார்டன் எண்டர்பிரைஸ் என்னும் நிறுவனத்தை நடத்துவதாகவும், அந்த நிறுவனம் 2 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 24 ரூபாய் வரி செலுத்த வேண்டும் எனவும் கடிதம் வந்துள்ளது. இதனை அடுத்து, அதிர்ச்சியடைந்த ராணிபாபு, இந்த கடிதம் குறித்து தனது மகன் சங்கருடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

மூதாட்டி ராணிபாபுவுக்கு வந்த கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த சம்பவம் குறித்து ராணிபாபுவின் மகன் சங்கர் கூறுகையில், "அன்றாடம் கூலி வேலை செய்தால் தான் தங்களது குடும்பமே வாழ முடியும் என்ற சூழல் உள்ள நிலையில், வாடகை வீட்டில் வசிக்கும் எங்களுக்கு 2 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கடிதம் வந்துள்ளது, மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மன வருத்தத்துடன் கோரிகை விடுத்தார்.

இதையும் படிங்க:தனியார் வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மாற்றி வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது!

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது, "கூலி தொழிலாளிகள் மற்றும் இல்லத்தரசிகளை குறிவைத்தே சில கும்பல் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு செய்து வருகின்றனர். சாமானிய மக்கள் தங்களது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி சில மோசடி லோன் ஆப்கள், தனியார் வங்கிகளிடம் அளிக்கின்றனர்.

இதுபோன்ற சூழலில், சாமானிய மக்களின் இந்த ஆவணங்களைக் கொண்டு, மோசடி கும்பல்கள் போலியான தொழில் நிறுவனங்களை நடத்தி, அதில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்துவிடுகின்றனர். பின்னர் ஜி.எஸ்.டி வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சாமானிய மக்களுக்கு, ஜி.எஸ்.டி-யாக பல கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்புவதால், மக்கள் அச்சமடைந்து தங்களது இயல்பு வாழ்க்கையை தொலைக்கின்றனர்.

அந்த வகையில், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் கடந்த சில ஆண்டுகளாக 25க்கும் மேற்பட்டோர் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி வரியில் சாமானிய மக்களின் பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாயை மர்ம கும்பல்கள் மோசடி செய்துள்ளனர்" என்று தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details