சென்னை:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புபொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாணை 243 சமூக நீதிக்கானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடியது தமிழக அரசின் அரசாணை எண் 243 அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வினை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்கிறது.
அரசாணை எண் 243 மாநில முன்னுரிமையை முன் நிறுத்துவதால் ஒன்றிய முன்னுரிமை பாதிப்பு என தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் நீலி கண்ணீர் வடித்து இரட்டை வேடம் போடுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 2006 ஆம் ஆண்டு பணி வரன்முறை செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் மறுக்கப்பட்ட உரிமை அரசாணை எண் 243 ன் மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை ஏற்க மறுக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் (திங்கள்)நேற்று நடைபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு , இன்று (செவ்வாய்) நடைபெற உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது.ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடைபெறும் போது புதனன்று மட்டும் அதனை எதிர்த்து மறியல் செய்வேன் என இரட்டை வேடம் போடுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு அவசியம் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது பணியிட மாறுதல் ஒன்றே தற்போது தொலைதூரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். இந்த உண்மையை உணர்ந்தும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற மறியல் போராட்டத்திற்கு ஆர்வம் காட்டும் ஆசிரியர் கூட்டமைப்புகள் ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு என்பதை அரசு மாற்றி ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்விற்கு அவசியமில்லை என அரசு கொள்கை முடிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்தை இன்று வரை அரசை வலியுறுத்தவில்லை.
மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மட்டும் நடக்கக்கூடாது என கண்மூடித்தனமாக போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஒன்றியத்திற்கு சந்தா வாங்கி சங்கம் வளர்க்கும் கூட்டமைப்புகள் தன் கீழுள்ள ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்திற்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலில் செல்ல விடாமல் கூண்டுக்கிளி ஆக அடைத்து வைத்து ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகாமல் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகவே இப்போராட்டம் என்பதை அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் உணர வேண்டும்.