ராமநாதபுரம்:பழந்தமிழ் எழுத்தான 'தமிழி' எழுத்துருவில் கோலம் வரைந்து பொங்கலை கோலாகலமாக கொண்டாடிய திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா (Pongal Celebration) கொண்டாட்டத்தின் போது தண்ணீரில் கோலம் போட்டும், தமிழி எழுத்துருவில் பொங்கல் வாழ்த்து எழுதியும் மாணவிகள் அசத்தினர்.
அப்பள்ளியில் நேற்று (ஜன.10) நடந்த பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தின் போது, மாணவிகள் பொங்கல் தொடர்பான கோலங்களை பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளின் முன்பும் வரைந்தனர். இதில் ஆறாம் வகுப்பு மாணவிகள் தண்ணீரில் வரைந்த கோலமும், பழமையான தமிழி எழுத்துருவில் அமைந்த வாழ்த்தும் அனைவரது மத்தியிலும் பாராட்டப்பட்டது.
தண்ணீரில் கோலம் வரைந்த மாணவிகள் (ETV Bharat Tamil Nadu) தண்ணீரில் கோலம்:
ஒரு பெரிய தாம்பாளத்தில் மணல் பரப்பி அதன் மேல் கோலம் வரைந்து, அதில் மெழுகை சிறுசிறு துகள்களாக செதுக்கி, அதன்மேல் பரப்பி பின்பு தாம்பாள தட்டை சூடுபடுத்தினர். இப்பொழுது மேலே உள்ள மெழுகு உருகி ஒரு படலம் உருவாகியிருக்கும். அதன் மீது தண்ணீரை ஊற்றியபோது கோலம் தண்ணீரில் மிதப்பது போல தோற்றமளித்தது. பள்ளி மாணவ மாணவிகள் இதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இடைநிலை ஆசிரியர் தமயந்தியின் மேற்பார்வையில், மாணவிகள் சுபாஶ்ரீ, செல்வபிரீத்தி, தனுஶ்ரீ, விசாலினி ஆகியோர் இக்கோலத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.
தண்ணீரில் கோலம் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:பழமையான 'தமிழி' எழுத்து; ஆர்வத்துடன் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள்!
'தமிழி' எழுத்துருவில் கோலம்:
பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற செயலர் வே.ராஜகுரு ஒவ்வொரு ஆண்டும் 25 மாணவர்களுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகள் குறித்த பயிற்சியை வழங்கி வருகிறார். இக்கல்வியாண்டில் பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பெரிய பொங்கல் கோலம் வரைந்து அதன் நடுவில் 'பொங்கல் வாழ்த்து' எனவும், கோலத்தின் கீழே 'இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்து' எனவும் பழமையான தமிழி எழுத்துகளில் எழுதி அசத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து, கோலம் வரைந்து அசத்திய மாணவிகளை தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.