தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினா, பெசன்ட் நகர் பீச்சில் டோல்கேட் முறையில் கட்டணம்: என்ன சொல்கிறது சாத்தியக்கூறு ஆய்வறிக்கை? - CHENNAI MARINA PARKING SYSTEM

சென்னை மெரினா கடற்கரையில் வாகனங்களை நிறுத்த டோல்கேட் முறையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்து சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, மெரினா கடற்கரை (கோப்புப்படம்)
சென்னை மாநகராட்சி, மெரினா கடற்கரை (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2025, 7:31 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் வாகனங்களுக்கு டோல்கேட் முறையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மேலும் மேற்கண்ட இரு கடற்கரைகளில் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் இருப்பதை தடுக்கவும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்த முறையை அமல்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்மார்ட் வாகன நிறுத்த முறை

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனம் மூலம் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. அந்த வகையில், மெரினா கடற்கரையில் எதை நுழைவு வழியாகவும், எதை வெளியேறும் வழியாகவும் அமைப்பது? கிடைக்கும் வருவாயில் சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இடையிலான பங்கீட்டு அளவு எவ்வளவு? கட்டண வசூலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் போன்ற சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

வருவாய் இரட்டிப்பாக வாய்ப்பு

இதை கொண்டு வந்தால், சுங்கச்சாவடி போல, மெரினா கடற்கரை வாகன நிறுத்த பகுதிக்குள் வாகனங்கள் வந்தாலே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். மேலும், நவீன சென்சார்கள் மூலம் எங்கெங்கு வாகன நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என செயலி மூலமாக வாகன ஓட்டிகளே பார்த்து தெரிந்துகொள்ளும் வசதியை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காலை உணவு திட்டத்தை தனியாருக்கு விடுவது அரசின் முடிவு...சென்னை மேயர் பிரியா விளக்கம்!

தற்போது மெரினாவில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வார நாட்களில் சுமார் ரூ.6 ஆயிரமும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாகன நிறுத்த கட்டணம் வசூலாகிறது. நவீன முறையை கொண்டு வந்தால், இந்த வருவாய் இரட்டிப்பாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டவை:

இதற்கான கணக்கெடுப்பு பணிகள் 6 நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தமாக 15 பணியாளர்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பணியாற்றுவார்கள். வாகன நிறுத்ததிற்கு வரும் வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் நேரத்தை Wiitronics இன் MPOS பயன்பாடு மூலம் வானக ஓட்டிகள் அறிந்து கொள்ள முடியும். மேலும் வாகன நிறுத்தும் இடத்தில் சராசரியாக வாகன நிறுத்ததிற்கான நேரம் மற்றும் நெரிசல் மிகுந்த போக்குவரத்து நேரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

உள்ளே - வெளியே வழிகள்

தற்போது மெரினா கடற்கரையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கு 3 நுழைவாயில்கள் உள்ளன. இதனை ஒட்டுமொத்தமாக உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடத்தினை 5 ஆக மாற்றி, மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே வாகனங்கள் உள்ளே வருவதற்கும், அந்த வாகனங்கள் ராணி மேரி கல்லூரிக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து வெளியே செல்வது போன்று அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன நிறுத்தும் இடத்தில் 1,100 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், 510 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தவதற்கும், 40 பேருந்துகள் நிறுத்துவதற்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேலைநாட்களில் 1,134 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், வார இறுதி நாட்களில் 5,720 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவதற்கான வாய்ப்புள்ளது. அதே போல வேலை நாட்களில் 884 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், வார இறுதி நாட்களில் 3,600 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

கட்டண நிர்ணயம்

வார இறுதி நாட்களில் 40 முதல் 50 பேருந்துகள் குறைந்தபட்சம் 4 மணி நேரம் வாகன நிறுத்ததில் நிறுத்தலாம். இருசக்கர வாகனத்திற்கு 5 ரூபாய் அளவிலும், நான்கு சக்கர வாகனத்திற்கு 20 ரூபாய் அளவிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் உள்ள 18 வேலை நாட்களில் மெரினா கடற்கரைக்கு வரும் இருசக்கர வாகனங்கள் மூலம் 1,02,060 ரூபாய் வருவாய் ஈட்டும். ஒரு மாதத்தில் உள்ள 12 வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனங்கள் மூலம் 3,43,200 ரூபாய் வருவாய் ஈட்டும்.

மாதம் ரூ.16,27,500 வருவாய்

ஒரு மாதத்தில் உள்ள 18 வேலை நாட்களில் மெரினா கடற்கரைக்கு வரும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் 3,18,240 ரூபாய் வருவாய் கிடைக்கும். ஒரு மாதத்தில் உள்ள 18 வேலை நாட்களில் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் 8,64,000 ரூபாய் வருவாய் கிடைக்கும்.

மொத்தமாக மெரினா கடற்கரைக்கு வருகை புரியும் இரு சக்கர வாகனம் மூலம் ஒரு மாதத்திற்கு 4,20,300 ரூபாயும், மொத்தமாக மெரினா கடற்கரைக்கு வருகை புரியும் நான்கு சக்கர வாகனம் மூலம் ஒரு மாதத்திற்கு 12,07,200 ரூபாயும் என மொத்தமாக 16,27,500 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனத்திற்கான கட்டண முறை

சாலையின் இடதுபுறத்தில் இருந்து மட்டுமே நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படும், குறுக்கு வழிகளோ, இலவச நுழைவோ கிடையாது. மேலும், ஃபாஸ்டேக் (Fastag) அடிப்படையில் பணம் பெறப்பட்டு வாகனங்கள் வெளியேறும்போது தடை ஏதும் இல்லை.

இருசக்கர வாகனத்திற்கான கட்டண முறை

சாலையின் இடதுபுறத்தில் இருந்து மட்டுமே இரு சக்கர வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படும். இருசக்கர வாகன நிறுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் இரு சக்கர வாகனத்திற்கு தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details