தமிழ்நாடு

tamil nadu

கோவையில் ஒரு கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்.. நால்வர் சிக்கியது எப்படி? - Coimbatore Gold fraud

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 8:55 AM IST

கோயம்புத்தூர் நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க பிஸ்கட்டுகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசங்கர் என்பவர், சூலூரில் உள்ள தனது நண்பர் கல்யாணராமன் மூலம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு என்ற சந்திரசேகருக்கு அறிமுகமாகியுள்ளார். சந்திரசேகர், ஹரிசங்கரிடம் தனது வசம் அதிக பணம் இருப்பதாகவும், தங்கக் கட்டிகளை வாங்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

இதனை நம்பிய ஹரிசங்கர், சந்திரசேகருக்கு ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கொடுத்துள்ளார். ஆனால், பணம் கொடுக்காமல் சந்திரசேகர் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து ஹரிசங்கர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாப்பம்பட்டி பிரிவில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க:"கொங்கு மக்களுக்கு நேர்ந்த அவமானம்" - பொங்கி எழுந்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்

இந்த ஆய்வில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, நவீன் குமார், பிரபு மற்றும் இளம் சிறார் உட்பட 4 பேர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், நகை மோசடி சம்பவத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏமாற்றி பெறப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளம் சிறார் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details