புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அதிமுக முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட கபடி கழகத்தின் தலைவருமான இவர் காட்டுபாவா பள்ளிவாசல் அருகே தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடியில் இருக்கின்றனர்.
இந்நிலையில், ஜகபர் அலி கடந்த 17ம் தேதி அவர் வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று விட்டு டூ வீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த மினி டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருமயம் காவல்துறையினர் ஜகபர் அலி உடலை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அங்கு வந்த ஜகபர் அலியின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள், திருமயம் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள் மீது ஜகபர் அலி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கனிமவள கொள்ளையை தடுக்க தொடர்ந்து போராடி வந்த இவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். எனவே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், இது குறித்து திருமயம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வேண்டுமென்றே திட்டமிட்டு ஜகபர் அலியை விபத்தை ஏற்படுத்தி படுகொலை செய்தது அம்பலமானது.
இதையும் படிங்க: பாம் சரவணனுக்கு சிகிச்சை அளிக்கக் கோரிய மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
இந்நிலையில், இதனை கொலை வழக்காக மாற்றி குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், குவாரி உரிமையாளர் ராமையா மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
தொடர்ந்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தற்போது ஜகபர் அலி படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் ராமையா ஏடிஎஸ்பி முரளிதரன் முன்னிலையில் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குவாரி உரிமையாளர் ராமையாவும் கைதாகியுள்ளார்.