தமிழ்நாடு: மைக்ரோசாப்டில் பயன்படுத்தப்படும் "க்ரவுட் ஸ்ட்ரைக்" என்ற மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலக அளவில் பெரிதளவிலான இணைய சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், முக்கியமாக விமான முன்பதிவு மற்றும் போர்டிங் சேவைகள் முடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் 190க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
குறிப்பாக, கோவையிலிருந்து சென்னை செல்லும் இரண்டு விமானங்கள், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் டெல்லி, புனே செல்லும் விமானங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் கோவை விமான நிலையத்தில் தவித்தனர்.
முக்கியமாக, சென்னை மற்றும் பெங்களூர், ஹைதராபாத் விமானங்களில் செல்ல வந்த பயணிகள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், இணைப்பு விமானங்கள் மூலம் லண்டன் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகளும் தவித்தனர்.
விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல், தாமதமாகும் தகவல் என எதையும் விமான சேவை நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். மேலும் விமானம் ரத்து செய்யப்பட்டதோடு அடுத்த சேவை எப்போது துவங்கும் என்பதும் தெரியாததால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர். பலர் விமான பயணத்தை தவிர்த்து வீட்டுக்குச் சென்றனர்.