சென்னை:தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எழுதித் தருகிறது. தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு பாடப்புத்தகத்தை மாற்றம் செய்வதற்கு அறிவிக்கப்பட்டு, அதற்கான வரைவுகள் வெளியிடப்பட்டன. அதனைத் தாெடர்ந்து, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பாடப்புத்தகம் அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.