சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (25). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மாவு கட்டு போடும் பிரிவில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண் அபுதாபிக்கு பணிக்காகச் சென்ற நிலையில், தற்போது அங்கேயே செட்டில்லாகியுள்ளார். இதனால், ஆகாஷிடம் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆகாஷ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஆகாஷ் அவரது காதலியிடம் மீண்டும் செல்போனில் பேசியுள்ளார். இதில் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆகாஷ் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று இரவு மாவுக்கட்டு போடும் அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். சக ஊழியர்கள் அறையை உடைத்து பார்த்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்த ஆகாஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.