கோயம்புத்தூர்: வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் வராமல் இருக்க, வனப்பகுதியை ஒட்டி அகழி எடுத்தல், சோலார் மின் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இதனையும் மீறி ஊருக்குள் வந்து பயிர் சேதம் செய்வது, பொதுமக்களை தாக்குவதுமாக உள்ள யானைகளை பிடிப்பதற்கும், அதனை இட மாற்றம் செய்வதற்காகவும் பிரத்யேகமாக பழக்கப்பட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவிலேயே சிறந்த கும்கிகள் தமிழகத்தில் தான் உள்ளது என வனத்துறையினர் கூறுகின்றனர்.
அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் முதுமலை யானைகள் காப்பகத்தில் உள்ள 29 கும்கி யானைகள், டாப்சிலிப்பில் உள்ள 26 கும்கி யானைகள் என மொத்தம் உள்ள 55 கும்கி யானைகளில் கலீம், வில்சன், சின்னதம்பி யானைகள் மிகவும் பிரபலமானதாக உள்ளது என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குணங்களை கட்டிப்போட முடியாது: இத்தகைய கும்கி யானைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து யானை பாகன்கள் கூறுகையில், “அதிகம் பிரச்னைக்குரிய காட்டு யானையைப் பிடித்து வந்து முதலில் மரக்கூண்டில் அடைப்போம். முதல் ஒரு வாரத்துக்கு கூண்டை உடைத்து, எப்படியாது தப்பிச்சு போகணும்னு ஆக்ரோஷமாவே இருக்கும். நம்ம மேல இருக்குற கோபம் எல்லாம், கூண்டுல முட்டி வெளிப்படுத்தும்.
நாங்க சொல்ற கட்டளைகளை செஞ்சா தான் உணவு தருவோம். சில நேரம் யானை நம்மள துரத்தும், அதுபோன்ற நேரத்தில் பல பேர் அடி வாங்கி உள்ளனர். நம்ம என்னதான் பழகினாலும், அது காட்டு யானை தான். அதோட கால்கள வேண்டுமானால் சங்கிலியால் கட்டலாம். ஆனா, அதோட குணங்களைக் கட்டிப்போட முடியாது. ஏதாவது ஒரு நேரத்துல அந்த கோபம் வந்துட்டேதான் இருக்கும்.
ஒரு துண்டு கரும்பு: ஒவ்வொரு முறை நம்ம சொல்றதை கேக்கறப்ப, யானைக்கு ஒரு துண்டு கரும்பு தருவோம். படிப்படியா அந்த ஆக்ரோஷம் குறைஞ்சு சாதுவா மாறி, நம்ம சொல்றதை கேக்க ஆரம்பிச்சுடும். அந்த ஒரு துண்டு கரும்புலதான் எல்லாமே இருக்கு.
மத்த இடத்துல எல்லாம் அங்குசம் வெச்சு தான் யானைக்கு பயிற்சி குடுப்பாங்க. நாங்க அங்குசத்தை எல்லாம் தொடவே மாட்டோம். கருந்துவரை குச்சிதான் பயன்படுத்துவோம். இது பெருசா வலிக்காது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அங்குசுத்தை வெச்சு யானைகள குத்துவாங்க. அதனால்தான் யானைகள் கோபப்பட்டு பாகன்களை தாக்குகிறது.
ஆனால், தமிழகத்தில் பாகன்கள் நெருங்கி பழகி, அன்பா, பாசமா, அனுசரணையா பேசுவது தான் எங்க பழக்கம். அப்படி பழகினாலே அது நல்லா புரிஞ்சுக்கும். நம்ம குழந்தைங்களை கொஞ்சுவது போல் தான். நாங்கள் சாப்பிடும் போது கூட யானைக்கு கொடுத்து விட்டுதான் சாப்பிடுவோம்.
குறும்புக்கார யானைகள்: கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பல ஆபரேஷனில் வெற்றிகரமா முடிச்சுருக்கோம். இப்பவும் கேரளா முத்தங்கி யானை முகாம்ல டாப்ஸ்லிப்பைச் சேர்ந்த பாகன்கள் தான் வேலை பார்க்குறாங்க. யானைக்கு பயிற்சி குடுக்கறது ஒரு மாதிரியான சவால்கள் இருக்கும். அதுவே ஏற்கனவே பயிற்சி பெற்ற யானைகளுக்கு சில நேரங்களில் பாகன்கள் மாற வேண்டிய சூழல் வரும். அதில் சவால் இன்னும் அதிகம்.