தமிழ்நாடு

tamil nadu

நீட் விலக்கு தீர்மானம்; கள்ளக்குறிச்சி விவகாரத்தை மடைமாற்ற திமுக நாடகம் - எடப்பாடி குற்றச்சாட்டு! - EPS on NEET Exemption resolution

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 2:32 PM IST

EPS about NEET Exemption resolution: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நீட் விலக்கு தொடர்பாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம் எனவும், நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படம்
எடப்பாடி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:இன்று நடைபெற்றதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும் என வலியுறுத்திய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேரவை தலைவர் ''முதலமைச்சரின் தனித்தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்படுகிறது'' எனக் கூற, உறுப்பினர்கள் வாய்மொழியாக அதனை ஏற்றனர். பின்னர், நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான். அது நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? இத்தீர்மானம் இந்த விடியா திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இதுபோன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை. நீட் தேர்வை நாடாளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற, மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியால் கடந்த 2010ல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஒரே இயக்கம் என்ற அடிப்படையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சட்டப் பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details