திருச்சி:திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு துரை வைகோ விமானம் மூலம் வந்தார். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நீட் தேர்வு சர்ச்சை குறித்து கேட்டதற்கு, “திராவிட இயக்கங்கள் தொடர்ந்து நீட் சமூக நீதிக்கு எதிரானது, மாநில உரிமைகளுக்கு எதிரானது எனச் சொல்லி வருகிறோம். நீட் தேர்வில் தரப்படும் கிரேஸ் மார்க் என்பது தவறானது.
துரை வைகோ பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் கிடையாது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவிலிருந்து நீட் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நீட் வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் உரிமை மாநில அரசிற்கு தரப்பட வேண்டும். நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை, அவர் அதிமுக தலைவராக இருக்கிறார் என்பதை காண்பிப்பதற்காகவே காவிரி பிரச்னை குறித்து பேசி வருகிறார். கடந்த 10 வருடம் ஆட்சியில் இருந்த போது அவர்கள் என்ன செய்தார்கள்?
காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை, தமிழக முதலமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனை தமிழக அரசு சட்ட ரீதியாக போராடி வருகிறது. இனிவரும் காலங்களில் அதற்கு ஒரு நல்ல தீர்வு வரும்.
பாஜக அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை அவர்கள் இயற்கையான கூட்டணி கிடையாது. பல இயக்கங்கள் அந்தக் கூட்டத்தில் ஒரு நிர்பந்தத்தின் காரணமாக இருக்கின்றனர். அவர்களுக்கு மெஜாரிட்டி கிடையாது. கூட்டணியை வைத்து தான் அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாஜகவைப் பொறுத்தவரை அவர்கள் மற்ற கட்சியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றுவது தான் வாடிக்கை. தற்பொழுது தெலுங்கு தேசம், நிதீஷ் குமார் கட்சியை நம்பி அவர்கள் ஆட்சியில் உள்ளனர். வரும் ஐந்து ஆண்டுகளில் அவர்கள் அடுத்தகட்டமாக மற்ற கட்சிகளை உடைக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைப்பற்றவும் பார்ப்பார்கள். இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காக அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
மேலும், அமலாக்கத்துறை சோதனை மூலம் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்ப்பார்கள். இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது. பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ளதால் அமலாக்கத்துறை சோதனைகள் தொடரும்.
அதை இன்னும் கடுமையாக அவர்கள் செய்வார்கள். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவும், சிலரை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் மிரட்டல், பிளாக்மெயில் என அனைத்தையும் செய்வார்கள். கடந்த காலங்களில் அவர்கள் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து இருக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் கூட்டணியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
திருச்சி எம்பி தொகுதியில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகியவை வானம் பார்த்த பூமி. மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. என் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை, வைகை - காவேரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம். இத்திட்டத்தை இந்த சாமானியன் மத்திய அரசின் நிதியுடன் செயல்படுத்துவேன். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கினால், திட்டங்களைச் செயல்படுத்த முடியும். முடிந்தவரை என்னால் ஆன அனைத்தையும் செய்வேன்.
பாஜகவினர் 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர். அது அவர்களது வளர்ச்சியா? சென்ற முறை 9 இடங்களில் போட்டியிட்டு அவர்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தை விட, தற்போது 23 இடங்களில் போட்டியிட்டு அவர்கள் வாங்கிய வாக்கு சதவீதம் குறைவு. பாஜக கூட்டணியில் பாமக மற்றும் அனைத்து சாதி கட்சிகள் மற்றும் பாரிவேந்தர், டிடிவி. ஏ.சி.எஸ் உள்ளிட்ட செல்வாக்கான நபர்களின் வாக்குகளும் சேர்ந்துள்ளது.
சீமானைப் போல் பாஜகவை தனியாக நிற்கச் சொல்லுங்கள், அவர்கள் வாக்கு சதவீதம் உயர்ந்து விட்டதை ஒத்துக் கொள்கிறேன். 40 இடங்கள் ஜெயித்தும் பிரயோஜனம் இல்லை என்று சொல்கிறார்கள். இன்னும் இருபது இடங்கள் பாஜக குறைந்திருந்தால் அவர்கள் அறிவாலயம் வாசலில் காத்திருப்பார்கள்.
திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதே என்ற கேள்விக்கு, இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவின் சாதி, மத பிரச்சாரம், சமூக வலைத்தளங்களில் அவர்களின் பொய் பிரச்சாரத்தையும் மீறி நாங்கள் அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரமே இந்த வெற்றிக்கு காரணம். மத்திய அரசின் போதிய நிதி ஒதுக்காதது, அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி நாங்கள் பிரச்சாரம் செய்தோம், இந்த நிதி நெருக்கடியிலும், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்துள்ளது. தமிழக அரசு பல லட்சம் கோடிகளுக்கு முதலீட்டைக் கொண்டு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 40க்கு 40 என்ற மிகப்பெரிய வெற்றியை முதலமைச்சரின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க:"தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு இல்லை" - பாஜக வாக்கு குறைய இதுதான் காரணம்.. ஈபிஎஸ் அளித்த விளக்கம்! - edappadi palanisamy