தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழையும், தமிழ்நாட்டையும் மதிக்கக் கூடிய ஆட்சியை அமைக்க வேண்டும்" - கனிமொழி எம்.பி! - parliament election 2024

DMK MP Kanimozhi: நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையும், தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் மதிக்கக் கூடிய ஆட்சியை நாம் அமைக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimozhi MP
திமுக எம்பி கனிமொழி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 4:43 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், மக்களிடம் நேரில் சென்று பரிந்துரைகளைப் பெற்று வருகின்றனர். அதாவது 'உரி­மை­களை மீட்க ஸ்டாலி­னின் குரல்' நாடா­ளு­மன்­றத்­தில் என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று (பிப்.26) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு பரிந்துரைகளை அளித்தனர்.

அதாவது, 2024 மக்­க­ளவை தேர்­த­லை­யொட்டி, தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் எம்பி கனி­மொழி தலை­மை­யிலான, 11 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்டு, பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களுக்குச் சென்று கருத்துக்களைக் கேட்டு வருகின்றனர்.

அப்போது, வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அப்போது, மேடையில் பேசிய கனிமொழி, "முதலமைச்சர் அமைத்த தேர்தல் அறிக்கை குழுவில், மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு, மக்களின் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக் கட்டளையிட்டார். அதனடிப்படையில், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அமைப்புகள், விவசாயிகள், தொழிலாளிகள், தொழில் முனைவோர், மகளிர் குழுக்கள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளைக் கேட்டோம்.

கழகத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க இருக்கிறோம். வரப்போகும் தேர்தல் மிக முக்கியமான தேர்தல், வெறும் அரசியல் வெற்றியை முன்வைக்கக் கூடிய தேர்தல் அல்ல. அதைத் தாண்டி இந்த நாடு என்னவாக இருக்க வேண்டும், எல்லோருக்குமான, அத்தனை மாநிலங்களின் மனிதர்களையும் மொழிகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடாக, மதிக்கிற நாடாக, மாநில உரிமைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசை உருவாக்கக் கூடிய தேர்தல்.

இப்போதைய ஒன்றிய அரசு மாநில உரிமைகள், மனிதர்களின் சுயமரியாதை, கருத்துரிமை எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழித்து வருவதைப் பார்க்க முடிகிறது. விவசாயிகள் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. GST என்ற குழப்பங்கள் மிகுந்த வரியைக் கொண்டுவந்து இங்கே தொழில் செய்வோரை முடக்குகிறது.

எல்லா தரப்பு மக்களையும் வதைக்கும் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி வருகிறது. நாம் எதை எடுத்துச் சொன்னாலும் அவர்கள் காதில் வாங்குவதில்லை. ஆகையால் வரக்கூடிய தேர்தலில் சாதாரண மக்களை மதிக்கக்கூடிய ஆட்சி அமைய வேண்டும். மதத்தின் பெயரால் அரசியல் காரணங்களுக்காகப் பிரித்தாளும் ஆட்சியை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை, தமிழ் மொழியை, தமிழ்நாட்டை மதிக்கக் கூடிய ஆட்சியை நாம் அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' - ஓபிஎஸ் தகவல்

ABOUT THE AUTHOR

...view details