சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், கடந்த 2024 ஜூன் 26ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்கள் மீதும், ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.