தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல்: வானில் வட்டமடித்த விமானங்கள்; ஸ்தம்பித்த விமான நிலையம்! - CYCLONE FENGAL

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது. புயல் காரணமாக இதுவரையில் எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 9:25 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) இன்று (நவ.30) சனிக்கிழமை கரையைக் கடக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய எடிஆர் ரக சிறிய விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன.

புயல் காரணமாக சென்னையில் இருந்து விஜயவாடா, துபாய், திருச்சி, புவனேஸ்வர், மதுரை, கோவை, சிங்கப்பூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, அந்தமான் உள்ளிட்ட 12 புறப்பாடு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதேபோல் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும், மிகவும் கவனமாக ஓடுபாதை தெளிவாக இருந்தால் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதனால், சென்னையில் தரையிறங்க வரும் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து, பின்னர் தரையிறங்கப்படுகிறது.

வானில் வட்டமடித்த விமானம்:

குவைத் நாட்டில் இருந்து இன்று காலை 6:35 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையம் அருகே வந்தடைந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்துள்ளது. அதன் பின்னர், ஓடு பாதை சீரானதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் தரையிறங்க அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்கள்:

புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. புயல் காரணமாக இதுவரையில் எந்த விமானங்களும் ரத்து செய்யவில்லை. போதுமான பயணிகள் இல்லாத காரணத்தினால், சென்னையில் இருந்து இன்று அதிகாலை 2.50 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரையை நெருங்கும் ஃபெஞ்சல் புயல்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இன்று நண்பகலுக்கு மேல் காற்றின் வேகம் அதிகரிக்குமானால், விமான சேவைகள் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) புயல் குறித்த தகவல்களை கண்காணித்து வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details