தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 2:55 PM IST

ETV Bharat / state

கரூர் தொகுதியை தக்க வைத்த காங்கிரஸ்.. "ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடுவோம்" - ஜோதிமணி உறுதி! - Karur Jothimani

Congress Candidate Jothimani Won in Karur: கரூர் தொகுதியில் 2வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, ஜனநாயகத்தை காப்பாற்றவும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க இனி போராடுவோம் எனவும் உறுதியளித்துள்ளார்.

வெற்றிக்குப் பின் ஜோதிமணி பேட்டியளிக்கும் புகைப்படம்
வெற்றிக்குப் பின் ஜோதிமணி பேட்டியளிக்கும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கரூர்:இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பெருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி துவங்கி நிறைவடைந்துள்ளது. 7 கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவு நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடந்து முடிந்தது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 294 இடங்களிலும், இந்தியா கூட்டணி கட்சிகள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தேர்தல் வெற்றிக்குப் பின் ஜோதிமணி அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மகத்தான சாதனையை படைத்துள்ளது என்றே கூறலாம். ஒரு இடத்தில் கூட பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் 2வது முறையாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் சுற்று துவங்கி இறுதி வரை நடந்த 25 சுற்றுகளிலும் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளி, இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியே முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1 லட்சத்து 66 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

  • மொத்தம் பதிவான வாக்குகள் - 11,25,359
  • பதிவான வாக்கு சதவீதம் - 78.70 சதவீதம்
  • போட்டியிட்ட வேட்பாளர்கள் - 54

இறுதிச்சுற்றில் பெற்ற வாக்குகள்:

வ.எண் கட்சி வேட்பாளர் பெயர் பெற்ற வாக்குகள்
1. காங்கிரஸ் ஜோதிமணி 5,34,906
2. அதிமுக தங்கவேல் 3,68,090
3. பாஜக செந்தில்நாதன் 1,02,482
4. நாதக கருப்பையா 87,503
5. நோட்டா 8,275

தபால் வாக்குகள் விவரம்:

வ.எண் கட்சி வேட்பாளர் பெயர் தபால் வாக்குகள்
1. காங்கிரஸ் ஜோதிமணி 3,077
2. அதிமுக தங்கவேல் 1,811
3. பாஜக செந்தில்நாதன் 965
4. நாதக கருப்பையா 541
5. நோட்டா 101
6. செல்லாதவை 1,024
மொத்தம் பதிவான தபால் ஓட்டுகள் 7,710

வாங்கு எண்ணிக்கை முடிவில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் செல்ல பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள ரவுண்டானா பகுதியில் காங்கிரஸ் சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிமணிக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, காமராஜர் ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு ஜோதிமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, "தேர்தல் முடிவுகளுக்கு முன் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளை பார்க்கும் பொழுது, அனைத்து ஊடகங்களும் பாஜகவின் ஊடகங்கள் போல செயல்பட்டதை காண முடிந்தது. ஆனால், மக்களின் எண்ணங்கள் வாக்கு எண்ணிக்கையில் வெளிப்பட்டுள்ளது. எப்படி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போராடினோமோ, அதேபோல ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கவும் இனி போராடுவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி? இந்தியா கூட்டணியின் திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details