விழுப்புரம்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் வானூா் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் அஞ்சல் வாக்குகளைச் சேகரிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்குகளை, வீட்டிலிருந்தவாறே அஞ்சல் வாக்குச் சீட்டின் மூலம் செலுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதன்படி, நடமாடும் அஞ்சல் வாக்கு சீட்டுக்குழுவினர் (Mobile Postal Ballot Team) ஏப்ரல் 4, 5, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை நேரில் அளித்து, அவர்கள் வாக்களித்த பின்னர் வாக்குச்சீட்டுகளை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டனர்.