கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், காமாட்சி புரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்(56) நுரையீரல் தொற்று பாதிப்புடன் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று(மார்ச்.12) காலை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் இருகூர் பகுதியில் உள்ள காமாட்சி புரி ஆதினத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள பிரதான மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஆதீன வளாகத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்?: ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் கந்தசாமி தேவர் மற்றும் குணவதியம்மாள் இவர்கள் கோவை காமாட்சி புரம் பகுதியில் குடியேறினர். இவர்களுக்கு 5வது குழந்தையாகப் பிறந்த சிவலிங்கேஸ்வரர். இதே பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார்.