திருச்சி:அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதான, திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா இன்று (ஏப்.16) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் உலக நன்மைக்காகவும், பக்தர்கள் நோய், நொடியின்றி வாழவும், குடும்பம் செழிக்கவும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை பூச்சொரிதல் விழா நடைபெறும்.
இந்த விழாக்காலங்களில் மரபு மாறி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதனால் இக்கோயிலுக்குத் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து ம் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஏப்.07 ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த் திருவிழா தொடங்கியது. அன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி, கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் உள் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும், அஸ்திர தேவர்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை கொடிமரத்தில் ஏற்றினர்.