தமிழ்நாடு

tamil nadu

எமர்ஜென்சி கதவைத் திறந்த மும்பை பயணி.. ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு! - Indigo Airlines Emergency door

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றதால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

சென்னை விமான நிலையம் கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி விமானத்துக்குள் ஒலித்தது.

இதனையடுத்து விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானி விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார். பின்னர், உடனடியாக விமான பணிப்பெண்கள் விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற பயணி யார் என்று விசாரித்தனர். அப்போது அவசரகால கதவு அருகே இருக்கையில் அமர்ந்திருந்த மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் (45) என்ற பயணி தான் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றார் என்று தெரியவந்தது.

இதையடுத்து விமானி அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அந்தப் பயணி தெரியாமல் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி விட்டேன் என்று கூறினார். ஆனால் விமானி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.

இதையும் படிங்க:கடலாடி தலைமறைவு குற்றவாளி 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஏர்போர்ட்டில் சிக்கினார்!

தொடர்ந்து, விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் சென்று பயணியிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்பு, அந்த பயணியின் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டு, அவரை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதோடு, அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் மும்பை பயணி வருண் பாரத் மீது விமான பாதுகாப்புச் சட்டத்தை மீறியது, விமானத்துக்குள் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, மும்பை செல்ல வேண்டிய இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 151 பயணிகளுடன் 2 மணி நேரம் தாமதமாக நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றது.

ABOUT THE AUTHOR

...view details