சென்னை: சென்னையில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 21 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோரை செம்பியம் தனிப்படை போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்தும், ஹரிகரன் என்பவரை ஐந்து நாட்கள் காலில் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் சிலரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது இந்த வழக்கில் சிலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிகரன், சிவசக்தி ஆகிய ஐந்து பேரை ஏழு நாட்கள் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் தனிப்படை போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.