தமிழ்நாடு

tamil nadu

பெண் கொலை பற்றி அவதூறு பரப்பியதாக அண்ணாமலை மீது கடலூரில் வழக்குப்பதிவு! - Case registered against Annamalai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 10:32 PM IST

Annamalai: கடலூரில் தேர்தல் அன்று பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பியதாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Annamalai
Annamalai

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் அன்று ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் திமுகவினர், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, இந்தப் பாதகச் செயலைச் செய்திருப்பதாகத் தனது எக்ஸ் தளத்திலும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், "கடந்த ஏப்ரல் 19 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமாணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி தலையிட்டு, பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது என கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்தது.

இந்தக் கொலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவினரை தொடர்புப்படுத்திப் பேசி இருந்ததால், திமுக இளைஞரணிச் செயலாளர் சுவாமிநாதன் என்பவர் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, இதுபோன்று தவறான தகவலைச் சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக வட இந்தியர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை வாதங்களுக்காக ஒத்திவைப்பு! - OPS Asset Transfer Case Adjournment

ABOUT THE AUTHOR

...view details