தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 3:51 PM IST

ETV Bharat / state

சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு என இ-மெயில் மூலம் மிரட்டல்! - Chennai Airport Bomb Threat Mail

Chennai Airport Bomb Threatening: சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் 7வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் உள்ள கழிவறை மற்றும் பயணிகள் ஒய்வறைகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டதோடு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை விமான நிலைய ஆணைய இ-மெயில் முகவரிக்கு இன்று காலை ஒரு தகவல் வந்தது. அதில், "சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறை மற்றும் பயணிகள் ஒய்வறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடிக்கும்" என்று கூறி இருந்தது.

இதனை அடுத்து, சென்னை விமான நிலைய ஆணையக இயக்குநர் அலுவலகத்திற்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து அவசர தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், விமான நிலைய போலீசார், விமான நிறுவன பாதுகாப்புப் படை, ஆணையக பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து விமான நிலையத்திற்கு தொலைப்பேசி மற்றும் இ-மெயில் என்று வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போது 7வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக விமான நிலைய கழிவறைகள் மற்றும் பயணிகள் ஓய்வறைகள் போன்றவற்றில் முழு சோதனைகள் நடத்தினர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் இல்லாத காரணத்தால், இது வதந்தி என்று தெரியவந்தது.

ஆனாலும், இதேபோல் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டு, சென்னை விமான நிலையம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, மிரட்டல் விடுக்கப்பட்ட இ-மெயில் முகவரியை வைத்து, அமெரிக்காவில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நவீன விபிஎன் தொழில்நுட்ப சாப்ட்வேர் மூலம் இதேபோல போலியான இ-மெயில் முகவரியை உருவாக்கி வெளிநாடுகளில் இருந்து, இந்த தகவல் வந்திருப்பதாக தெரியும்படி அனுப்பி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுமட்டும் அல்லாது, தொடர்ந்து இதேபோல் போலியாக வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பி வரும் மர்ம நபர் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த வெடிகுண்டு மிரட்டல் சென்னை விமான நிலையத்திற்கு மட்டும் வரவில்லை நாட்டிலுள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கும் இதே போல் வெடிகுண்டு மிரட்டல்கள் இன்று வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கோவை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. சோதனை தீவிரம்; காவல்துறை விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details