கோயம்புத்தூர்:இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
எதிரிகளே இல்லாமல் தேர்தலைச் சந்தித்து வந்த, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தவிர யாரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்ததில்லை. பண்டிட் நேருவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
18வது மக்களவைத் தேர்தலில் வென்றிருப்பது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. பாஜக மட்டும் தனித்து பெற்றிருப்பது 240 இடங்கள். 'இண்டி' கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பெற்றிருப்பது 234 இடங்கள். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெற்ற 29, ஆம் ஆத்மி கட்சி பெற்ற 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற 2 என, 35 இடங்கள் காங்கிரஸை எதிர்த்து பெற்ற இடங்கள்.
'இண்டி' கூட்டணிக்கு உண்மையிலேயே மக்கள் அளித்த தீர்ப்பு 199 இடங்கள் மட்டுமே. கடந்த 2019 முதல் 2024 வரை காங்கிரஸ் மக்களவைத் தலைவராக இருந்த ஆதீர் ரஞ்சன் சௌத்ரி மேற்கு வங்கத்தில் தோல்வி அடைந்திருக்கிறார். ஆனால், ஏதோ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடித்து விட்டது போலவும், தாங்கள் ஆட்சி அமைத்து விட்டது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால், பாஜக பெற்றதில் பாதியைக் கூட பெற முடியவில்லை. காங்கிரஸ் அமைத்த 'இண்டி' கூட்டணி பெற்ற மொத்த இடங்களை விடவும், பாஜக தனித்து பெற்ற இடங்கள் அதிகம். பெரும்பான்மையை நெருங்க முடியாத அளவுக்கு தோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகள், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதை கொண்டாட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கலாம். தேர்தலுக்கு முன்பே பாஜக அமைத்த கூட்டணிக்கு, நரேந்திர மோடி தான் பிரதமர் என்று முன்னிறுத்திய கட்சிகளுக்கு, மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். எனவே, மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான், இந்திய மக்களின் தெளிவான, உறுதியான தீர்ப்பு. மக்களின் தீர்ப்பை யாரும் மாற்ற முடியாது.