தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்தில் தாமரை சின்னம் ஒட்டுவதைத் தடுத்த ஓட்டுநரைத் தாக்கிய பாஜக பிரமுகர் கைது! - bus driver attacked by BJP person - BUS DRIVER ATTACKED BY BJP PERSON

Govt Bus driver Attack: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்னும் ஓரிரு நாளில் நிறைவடையும் சூழ்நிலையில், திருநெல்வேலியில் பாஜக பிரமுகர் அரசு பேருந்தில் அரசியல் போஸ்டரை ஒட்டியதோடு மட்டுமில்லாமல் தடுக்க சென்ற ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 1:24 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சி பகுதி சேர்ந்தவர் சுப்ரமணியன் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். நேற்று இரவு நெல்லை டவுனில் இருந்து மண்ணப்படை வீடு செல்லும் அரசு பேருந்தில் சுப்பிரமணியன் பணியிலிருந்துள்ளார். அந்த பேருந்தில் நெல்லை மாவட்டம் பாலமடையைச் சேர்ந்த பாஸ்கர் நடத்துநராக பணியிலிருந்துள்ளார்.

பேருந்து பாளையங்கோட்டை அடுத்த திம்மராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜகவின் சின்னமான தாமரை சின்னம் பொறித்த போஸ்டரை பேருந்தின் வாசலில் ஒட்டி விட்டு, முன்பக்க கண்ணாடியிலும் ஒட்ட முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த நடத்துநர் பாஸ்கர், இது அரசு பேருந்து எனவே அரசு பேருந்தில் அரசியல் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று தடுத்துள்ளார்.

அதற்கு மருதுபாண்டி, இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்சா என கேட்டதுடன் அருவருக்கத்தக்க வார்த்தையால் பாஸ்கரை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஓட்டுநர் சுப்பிரமணியன் மருதுபாண்டியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி அருகில் கடையில் இருந்த சோடா பாட்டிலை உடைத்து அதன் கூர்மையான பகுதியை வைத்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடியதாக FIR NO; 233/2024 -இல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதில் ரத்த காயம் அடைந்த ஓட்டுநர் சுப்ரமணியன், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஓட்டுநர் சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் மருதுபாண்டி மீது கொலை முயற்சி, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுப்பது உள்பட ஐந்து பிரிவுகளின் (307, 294(பி) 323, 353, 506 (ii)) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய மருது பாண்டியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்னும் ஓரிரு நாளில் நிறைவடையும் சூழ்நிலையில், திருநெல்வேலியில் பாஜக பிரமுகர் அரசு பேருந்தில் அரசியல் போஸ்டரை ஒட்டியதோடு மட்டுமில்லாமல் தடுக்க சென்ற ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:"ஜி பே' ஸ்கேன் பண்ணுங்க ஸ்கேம் பாருங்க" - பிரதமர் மோடி படத்துடன் கூடிய போஸ்டர் வைரல்! - G PAY MODI SCAM POSTER

ABOUT THE AUTHOR

...view details