திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சி பகுதி சேர்ந்தவர் சுப்ரமணியன் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். நேற்று இரவு நெல்லை டவுனில் இருந்து மண்ணப்படை வீடு செல்லும் அரசு பேருந்தில் சுப்பிரமணியன் பணியிலிருந்துள்ளார். அந்த பேருந்தில் நெல்லை மாவட்டம் பாலமடையைச் சேர்ந்த பாஸ்கர் நடத்துநராக பணியிலிருந்துள்ளார்.
பேருந்து பாளையங்கோட்டை அடுத்த திம்மராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜகவின் சின்னமான தாமரை சின்னம் பொறித்த போஸ்டரை பேருந்தின் வாசலில் ஒட்டி விட்டு, முன்பக்க கண்ணாடியிலும் ஒட்ட முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த நடத்துநர் பாஸ்கர், இது அரசு பேருந்து எனவே அரசு பேருந்தில் அரசியல் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று தடுத்துள்ளார்.
அதற்கு மருதுபாண்டி, இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்சா என கேட்டதுடன் அருவருக்கத்தக்க வார்த்தையால் பாஸ்கரை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஓட்டுநர் சுப்பிரமணியன் மருதுபாண்டியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி அருகில் கடையில் இருந்த சோடா பாட்டிலை உடைத்து அதன் கூர்மையான பகுதியை வைத்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடியதாக FIR NO; 233/2024 -இல் குறிப்பிடப்பட்டு உள்ளது.