சேலம்:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாள் இன்று (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் காமராஜரின் உருவப்படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலை பேசியதாவது, “மத்திய அரசு 2020-ல் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் திமுக அரசு மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது வேடிக்கையானது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்குவது வரவேற்கத்தக்கது. காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியங்கள், முட்டை உள்பட சத்தான உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு 100 சதவீதம் தயாராக உள்ளது. எனவே, திமுக அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு குறித்து வெள்ளை அறிக்கை:நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. இதில் ஏற்பட்ட குளறுபடி சிறிய அளவிலானது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்பது குறித்தும், முதல் தலைமுறை பட்டதாரிகள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர் என்பது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சரணடைந்த ரவுடி திருவேங்கடம் ஏன் தப்பி ஓட வேண்டும்? அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். போலீசார் வெளியிட்டுள்ள குற்றவாளிகள் படம், சிசிடிவி காட்சிகள் போன்றவை அவர்கள் தான் கொலையில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு.
பிஎம் கிசான் திட்டம்:தமிழகத்தில் பிஎம் கிசான் திட்டத்தில் 43 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு தலா ரூ.6,000 நிதி பெற்று வந்தனர். ஆனால், தமிழகத்தில் தற்போது 21 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 22 லட்சம் விவசாயிகள் மட்டுமே தற்போது பிஎம் கிசான் திட்டத்தில் நிதி பெறுகின்றனர். விவசாயிகள் மத்திய அரசின் மீது அதிருப்தி அடைய வேண்டும் என்பதற்காக விவசாயிகளை பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இதனைக் கண்டித்து திருச்சி தொடங்கி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்தப்படும்.
ஆசிரியர் பணியிடங்கள்: தமிழகத்தில் 4 ஆயிரத்து 372 அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதேபோல், மாநிலம் முழுவதும் 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் நலன் கருதி காலிப்பணியிடங்கள் அனைத்தையும் தமிழக அரசு நிரப்ப வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக, தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை , “காமராஜரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி முயற்சித்து வருகிறது” என்றார்.
இதையும் படிங்க:அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்! - Chief Minister Breakfast Scheme