திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழ்நாடு வளர்ச்சி அடைய அடித்தளமிட்டவர் காமராஜர் தான். 1971ல் மதுவிலக்கை நீக்கியவர் கருணாநிதி. அவர் மூன்று தலைமுறைகளை வீணடித்து விட்டார். ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழித்து மூடிய பள்ளிக்கூடங்களை திறந்தவர் காமராஜர். 13 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். அவருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு நீர்பாசன திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவேரியை இன்று கொள்ளையடித்து விட்டார்கள். அதை நாம் காப்பாற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கும் இடையே தடுப்பணை கேட்டோம். ஆனால், தமிழ்நாடு அரசு 20 மணல் குவாரிகளை தான் தந்துள்ளார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கிற்காக பணத்தையும், பொருளையும் கொடுத்தார்கள். ஆடு, மாடுகளைப் போல் மனிதர்களை பட்டியில் அடைத்து வைத்தார்கள்.
கல்வி, சமூக நீதி, நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றுக்கும் திமுக அரசுக்கும் சம்பந்தமே கிடையாது. இலவசக் கல்வி கொடுப்பது தான் அரசின் கடமை. இன்று மூன்றில் இரண்டு தனியார் பள்ளிகள் தான் உள்ளது. இது அரசின் தோல்வி. கல்வி குறித்து பேசாமல் சட்டமன்றத்தில் டாஸ்மாக் குறித்து பேசுகிறார்கள். 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ளார்கள். அவர்கள் படித்தவர்களா, பண்புள்ளவர்களா, மக்களுக்காக பேசுவார்களா? காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவது எங்களால் தான் முடியும். தமிழ்நாட்டில் சாராய ஆட்சி, கஞ்சா ஆட்சி தான் நடக்கிறது” என்றார்.
அண்ணாமலை: தொடர்ந்து, மேடையில் உரையாற்றிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்றால் முதலில் அரசியல் மாற்றம் நடக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தோராயமாக 500 நாட்கள் தான் இருக்கிறது. அந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் அது கிடைக்குமா என்பது தெரியாது. எனவே, 500 நாட்களையும் சரியாக பயன்படுத்த வேண்டும். 38 வயதுக்கு கீழே 40 விழுக்காடு வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கெளுக்கெல்லாம் காமராஜர் குறித்து கூறவே இந்த கூட்டம்.
காமராஜர் குறித்து எவ்வளவு பேசினாலும் நாம் நினைக்கும் அரசியல் மாற்றம் கனவாக தான் இருக்கிறது. அதனால் தான் வரும் 500 நாட்கள் நமக்கு வேள்வியாக இருக்கும். 37,000 அரசுப் பள்ளிகளில் 4,500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. 19,260 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இன்று இருக்கும் நிலையில் 2029ல் பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு தமிழகம் சென்று விடும். காமராஜர் தலைவராக இருந்த இடத்தில் இன்று யார் இருக்கிறார்கள் என்பது குறித்து கடந்த 10 நாட்களாக நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
1967-ல் ஆறு கட்சிகளை இணைத்து காமராஜரை திமுக தோல்வி அடையச் செய்தது. இன்று அதே போல மோடியை வீழ்த்த வேண்டும் என இந்தியா கூட்டணி அமைத்தார்கள். காமராஜருக்கு இணையாக திமுக ஒரு போதும் ஆகாது. தமிழ்நாட்டில் 2050ஆம் ஆண்டில் 36 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் தான் கிடைக்கும் என்பது நிதி ஆயோக் அறிக்கையாக கொடுத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் இந்த நிலையில் உள்ளது.