சென்னை:ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி கற்கும் வாய்ப்பினை முடக்க நினைக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கினை அறிவுச் சமூகம் வன்மையாகக் கண்டிக்கிறது என அறிவுச் சமூகத்தின் தலைவரும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் பள்ளிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தமிழ் முதல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாத காலம் நிறைவுற்ற நிலையில், பழங்குடியினர் நலத்துறையில் சுமார் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும். ஏற்கனவே நீக்கப்பட்ட தொகுப்பூதிய ஆசிரியர்களை மீண்டும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்.
இது குறித்து கோரிக்கை விடுத்த துறை சார்ந்த ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைமை நிர்வாகிகள் விவேக், சுதாகர், சங்கர சபாபதி ஆகியோருக்குக், குற்றக் குறிப்பாணை வழங்கி விளக்கம் கேட்டிருப்பதோடு அல்லாமல் 17 (b) விதியின் கீழ் பெருங்குற்றமாக நடவடிக்கை எடுத்திருப்பதை மிகப்பெரும் சர்வாதிகாரப்போக்காகக் கருதுகிறோம்.
அரசு ஜனநாயகப்பூர்வமான செயல்களைக்கூட கொடுமையாகக் கையாளுகிறது. இந்த அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர், கள்ளர் நலத்துறைப் பள்ளிகள் ஆகியவற்றை அழிக்க முயற்சிக்கிறது. பல ஆண்டுகாலம் பழங்குடியினப் பள்ளிகள் ஆசிரியர் இல்லாமலும், ஓர் ஆசிரியரைக் கொண்டும் அவதிப்பட்டு வந்தனர்.