மதுரை:தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒன்றை தமிழக முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட வரலாறு பாட முதுகலை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை பில்லர் மையத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியின் சிறப்பு:
இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரும் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வருமான முனைவர் ராமராஜ் கூறுகையில், “இப்பயிற்சியில் தமிழகத்திலுள்ள 50க்கும் முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொல்லியல்துறையின் ஆளுமைகளான முனைவர் வெ.வேதாசலம், முனைவர் வீ.செல்வகுமார், முனைவர் காந்திராஜன் ஆகியோர் பயிற்சி அளித்துள்ளனர். காலையில் பயிற்சி, பிற்பகலில் கீழடி அருங்காட்சியகம் மற்றும் அகழாய்வு நடைபெறும் இடம், நிலக்கோட்டை சித்தர் மலை, யானை மலை, அழகர்கோவில் ஆகிய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பாறை ஓவியங்கள், குகைகளில் உள்ள படுக்கைகள், தமிழி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன” என்றார்.
வகுப்பறைக்கு உயிரோட்டமாக இருக்கும்:
தொடர்ந்து பேசிய திருச்சி மாவட்டம் தொட்டியம் அரசு பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் கூறுகையில், “பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி மிகவும் சிறப்பான வகையில் வழங்கப்பட்டது. முனைவர் வேதாசலம் தமிழி எழுத்துருவிலும், தமிழ் வட்டெழுத்திலும் எவ்வாறு எழுதுவது என்பது குறித்த பயிற்சியை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது பெயர்களை எழுதி மகிழ்ந்தனர். இதுகுறித்து படித்திருந்தாலும்கூட, நேரில் கண்டுணர்ந்து அறிந்து கொள்வது நல்ல அனுபவமாக இருந்தது. அதேபோன்று பாறை ஓவியங்கள் குறித்து முனைவர் காந்திராஜன் வழங்கிய பயிற்சியும் பயனுள்ளதாகும். கற்பித்த பணிக்கு இந்தப் பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும். இதுபோன்ற பல பயிற்சிகளை வழங்கினால், எங்களுடைய வகுப்பறை மிக உயிரோட்டமாக இருக்கும்” என்றார்.