சென்னை:அண்ணா பல்கலைக்கழகம், வளாக கல்லூரி, இணைவு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்குத் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் டான்செட் (TANCET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
அதைபோல, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர்வதற்குக் கடந்த ஆண்டு முதல், பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை சீட்டா-பி.ஜி (CEETA) எனும் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான டான்செட், சீட்டா தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ளது.
2024-25ம் கல்வியாண்டிற்கான படிப்பில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு (சீட்டா-பி.ஜி) ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், இளநிலை படிப்புகளில் 2024-25ம் கல்வியாண்டில் இறுதி பருவ தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அதற்கான மதிப்பெண் சான்றிதழ் இல்லாமலும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டான்செட் எம்.சி.ஏ படிப்பிற்கு 9206 பேரும், எம்.பி.ஏ படிப்பிற்கு 24 ஆயிரத்து 814 பேரும், எம். டெக்,எம் ஆர்க்,எம் பிளான் படிப்பிற்கு 5281 பேரும் விண்ணப்பம் செய்தனர். எம்.சி.ஏ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 9ம் தேதி காலையிலும், எம்.பி.ஏ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அன்றைய தினம் பிற்பகலிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.