மதுரை:மதுரை கோச்சடையில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து நிறுத்தத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஏற்றாத மின்கட்டணத்திற்காக ஸ்டாலின் சட்டமன்றம் முன்பாக போராட்டம் நடத்தியதாகவும், தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். 40 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வைப் பரிசாக அளித்துள்ளதுள்ளார்" என்று அவர் விமர்சித்தார்.
"மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைப்பயிற்சிக்குச் செல்லகூட மக்கள் அச்சப்படுவதாக கூறிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை புகழ்ந்து பேசி வாக்கு கேட்டதாகவும், ஆனால் மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளதாக கூறிய அவர், யானைக்கும் அடி சறுக்கும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த முடிவுகள் இறுதி இல்லை எனவும் அதிமுக மீண்டும் அரியணை ஏறும் எனவும் கூறினார்.