தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் ஆர்.பி.உதயகுமார் கைது.. தனியார் உரத்தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்தது என்ன? - RB UDhAYAKUMAR ARREST

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 4:12 PM IST

RB Udayakumar Arrest: தனியார் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, கொளுத்தும் வெயிலில் கள்ளிக்குடி தேசிய நேடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராமப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது.

இதனால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக 6 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த வாரம் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுடன் கொளுத்தும் வெயிலில் கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, “பொதுமக்கள் தமிழ்நாடு அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஆலையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்” என கண்டன முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இது குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, “கள்ளிக்குடி ஒன்றியம் சென்னம்பட்டி, ஆவல்சூரன்பட்டி கிராமத்தில் கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மக்கச் செய்யும் தொழிற்சாலையால், சுற்றுச்சூழல் மாசடைந்து மக்களுக்கு புற்றுநோய் மற்றும் கொடிய தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இதனால் 30 கிராம மக்கள் இந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே நான் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று இந்த தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு கொடுத்தேன். தற்போது மக்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில், அரசின் கவனத்தை ஈர்க்க தேர்தலை புறக்கணித்தார்கள். நானும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினேன்.

தற்போது தற்காலிகமாக மூடிவிட்டு, பிறகு ஆய்வறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால், வாக்குப்பதிவின் போது இந்த தொழிற்சாலை இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இதை நிரந்தரமாக அகற்ற மக்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை. சிவரக்கோட்டையில் திமுக அரசு தொடங்கிய தொழிற்பேட்டையால் விவசாயம் பாதிக்கப்படும்.

அதை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீதிமன்றம் வரை சென்றார்கள். அப்போது, நாங்கள் பல்வேறு போராட்டங்கள் செய்தோம். பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சிவரக்கோட்டையில் தொழில்பேட்டை அமைக்க தடையாணை வழங்கி, அதனை தொடர்ந்து நிரந்தர அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் விரும்பாத எந்த திட்டங்களையும் அரசு செயல்படுத்தக் கூடாது. தற்போது இந்த கழிவுத் தொழிற்சாலையால் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

எந்த வேறு வேலை வாய்ப்பும் இல்லை. எந்த பொருளாதார வளர்ச்சியும் இல்லை. மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை எங்கே வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். ஆனால், மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கக்கூடாது. நிரந்தரமாக மூட வேண்டும்.

இந்த தொழிற்சாலையால் பாதிப்பு இல்லை என்றால், வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் வைப்பதால் மக்கள் அச்சப்படுகிறார்கள். கழிவுகளைக் கொட்டுவதற்கு இந்த இடத்தை தேர்வு செய்தால், மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இது பொன் விளையும் பூமி. மக்களுக்காக தான் திட்டங்கள் இருக்க வேண்டுமே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இருக்கக்கூடாது” எனக் கூறினார்.

இதையும் படிங்க:ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: போலீசிடம் நயினார் நாகேந்திரனின் உறவினர் அளித்த முக்கிய வாக்குமூலம்! - Rs 4 Crore Cash Seized Issue

ABOUT THE AUTHOR

...view details