தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மக்களை நேரில் சந்திக்க முடியாதவர்தான் எம்.பி.யாக உள்ளார்" - துரை வைகோவை விமர்சித்த அதிமுக நிர்வாகி!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மக்களை நேரில் சந்திக்க முடியாது என்று பேசியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது என்று அதிமுக நிர்வாகி கருப்பையா விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 12 hours ago

Updated : 4 hours ago

துரை வைகோ மற்றும் அதிமுக நிர்வாகி கருப்பையா
துரை வைகோ மற்றும் அதிமுக நிர்வாகி கருப்பையா (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துரை வைகோ 5,42,213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையா 2,29,119 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மூன்றாவது முறையாக பெருங்கொண்டான் விடுதி, பெருங்களூர், மங்களத்துப்பட்டி, கருக்குடையான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து துரை வைகோ, சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அந்த சுற்றுப்பயணத்தின் போது மக்களிடம் பேசிய துரை வைகோ, "சட்டசபை உறுப்பினருக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒரு எம்பிக்கு 6 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து 5 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 80 லட்சம் ரூபாய் மட்டுமே என்னால் நிதி ஒதுக்க முடியும். ஆகையால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்.

மேலும், இரண்டு மாதங்களாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, குறைகளையும் கேட்டு வருகிறேன். இனி வரும் காலங்களில் மக்கள் தங்களுடைய எந்த கோரிக்கையாக இருந்தாலும், திருசியில் உள்ள எம்.பி அலுவலகத்தில் மனுவாக கொடுத்து விடுங்கள், அங்கிருந்து உங்கள் கோரிக்கை எனக்கு வந்துவிடும்.

இதுமட்டும் அல்லாது, மக்கள் மனு அளிப்பதற்கு மட்டும் புதுக்கோட்டையிலும் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிந்தவரை உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்" என பேசினார்.

இதையும் படிங்க:"நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது" - சீமான் பேச்சு!

இந்த நிலையில், துரை வைகோ பேசியது குறித்து விமர்சித்து வீடியோ ஒன்றை திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் கருப்பையா வெளியிட்டுள்ளார். அதில், "வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, இதுதான் என் கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதனால் இனி வரும் காலங்களில் நேரில் வந்து மக்களை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை என்று பேசியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

மக்களை நேரில் சந்திக்க முடியா ஒருவரைதான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். எது எப்படி இருந்தாலும், அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இம்மண்ணுக்கு சொந்தக்காரன் என்ற வகையில், நான் எப்போதும் நம் பகுதி மக்களுக்காக உழைப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்பதை தெரிவிக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details