சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று காலை தொடங்கி, இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது.
பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதன் அடிப்படையில், சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.
இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று, உறுதியோடு எனது பயணம் தொடரும்” என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.