தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 3:28 PM IST

ETV Bharat / state

கோவையில் முன்விரோதம் காரணமாக 18 வயது இளைஞரை வெட்டிக் கொன்ற சிறுவன்.. கோவையில் பயங்கரம்..!

Coimbatore Murder: கோவை ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் 18 வயது இளைஞரைக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்:கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டி வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது 18 வயது மகன் பிரணவ். இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிரணவ் இன்று காலை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தம் முன்பாக தனது தோழி ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென பிரணவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் படுகாயம் அடைந்த பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, பிரணவை வெட்டிய இளைஞர் அங்கிருந்த மேம்பாலம் வழியாகத் தப்பி ஓடினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியிலிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பிரணவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கொலையாளி குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதனிடையே, பிரணவை வெட்டி விட்டுத் தப்பி ஓடிய அந்த இளைஞர், சூலூர் காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வாளர் மாதையனிடம் சரணடைந்தார். இதையடுத்து, அவரை சூலூர் காவல் துறையினர் சிங்காநல்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சிங்காநல்லூர் டெக்ஸ்டைல் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இக்கொலையைச் செய்ததும், காதல் விவகாரத்தில் பிரணவை வெட்டி கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.

இருவரும் பள்ளியில் படிக்கும்போதே மோதலில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால், இருந்த முன் பகை காரணமாக இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கொலை சம்பவத்தின் போது பிரணவ் உடன் நின்றிருந்த பெண்ணிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பட்டப்பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்… காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details