கடலூர்:விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பருத்திபுரம் சேர்ந்தவர் ராஜதுரை (26). இவருக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகியுள்ள நிலையில், ராஜதுரை நெல் அறுவடை இயந்திரத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது கடலூர் மாவட்டம் பல்லவராயநத்தம் பகுதியில் தங்கி நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட வந்தார்.
இந்நிலையில், ராஜதுரை நேற்று (அக்.20) இரவு இரு சக்கர வாகனத்தில் கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சென்று கொண்டிருந்த மாடு திடீரென அவரை முட்டி தூக்கியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது, மாட்டின் கொம்பு ராஜதுரை வயிற்றுப்பகுதியில் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து கீழே விழுந்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.