தமிழ்நாடு

tamil nadu

வைகை அணை சூழலில் சிக்கி உயிரிழந்த தீயணைப்பு வீரர்... நண்பர்களுடன் குளித்தபோது நேர்ந்த துயரம் - firefighter died in vagai

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 4:13 PM IST

vaigai river: வைகை அணை செக்டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்தபோது, சுழலில் சிக்கி தீயணைப்பு வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீயணைப்பு வீரர் சதீஷ்குமார்
தீயணைப்பு வீரர் சதீஷ்குமார் (Photo Credits - ETV Bharat Tamilnadu)

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களின் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றைக் கடக்கவோ, அதில் இறங்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தாம்பரம் பகுதியில் தீயணைப்பு துறை வீரராக பணியாற்றிவரும் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மதியம் தனது நண்பர்களுடன் வைகை அணையில் உள்ள செக்டேம் பகுதியில் குளிக்கச் சென்றிருந்தார்.

செக்டேம் பகுதியில் உள்ள தடுப்பணையிலிருந்து குதித்து குளித்துக் கொண்டிருந்தபோது, அணையில் இருந்து கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டதால், சதீஷ்குமார் திடீரென சுழலில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கினார். இதனைக் கண்டு அதிர்சசியடைந்த அவரது நண்பர்கள், சதீஷ்குமாரை காப்பாற்ற முயன்றும், அந்த முயற்சி பலிக்கவில்லை.

இதுகுறித்து அவரது நண்பர்கள் வைகை அணை போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து சதீஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்றிரவு வரை தேடுதல் பணிகள் தொடர்ந்தபோதும் சதீஷ்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் சதீஷ்குமாரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்தப் பணியில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்புத் துறை வீரர்களும் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்குப் பின்னர் வைகை அணை செக்டேம் முன்பாக உள்ள ஒரு பள்ளத்தில் சதீஷ்குமாரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

நண்பர்களுடன் சென்று குளித்தபோது தண்ணீர் சுழலில் சிக்கி தீயணைப்பு துறை வீரர் சதீஷ்குமார் பலியான சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சதீஷ்குமாருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சாலை தடுப்பில் வேன் மோதி விபத்து: தூத்துக்குடி சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ABOUT THE AUTHOR

...view details