திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் பகுதியில் எருமை மாட்டின் மீது அமர்ந்து பயணிக்கிறார் 62 வயதான ராஜா. இப்பகுதி மக்களுக்கு இது அன்றாடம் பார்க்கக் கூடிய காட்சி தான். நமது ஈடிவி பாரத் திருப்பத்தூர் செய்தியாளர் அரவிந்தன் ராஜாவை அணுகிய போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மூன்று சக்கர வாகனம் கேட்டு ஊராட்சி மன்ற நிர்வாகிகள் முதல் மாவட்ட ஆட்சியர், அரசுத் துறை அதிகாரிகள் வரை மனு அளித்தும், இதுவரையில் மூன்று சக்கர வாகனம் கிடைக்கவில்லையென மிகுந்த மன வேதனையோடு தெரிவிக்கிறார்.
எனக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனம் வேண்டுமென்று அரசு அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. 50 சதவீதம் ஊனம் இருந்தால் சக்கர நாற்காலி கொடுப்போம் என்றனர். என்னை சோதித்து பார்த்த போது 56 சதவீதம் இருந்தது. இருப்பினும் எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். மேலும் உடனடியாக அரசு அதிகாரிகள் தனக்கு சக்கர நாற்காலி மற்றும் உதவிகள் வழங்கிட வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது பற்றி ராஜா கூறுகையில், பிறந்து 10 மாதத்தில் இருந்தே இப்பிரச்சினை உள்ளது. என்னிடம் சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனம் ஏதும் இல்லாததால் நான் வளர்க்கும் எருமை மாட்டின் மீது பயணம் செய்து எனது தேவைகளை நிறைவேற்றி கொள்கிறேன். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை மட்டும் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் நடக்க ராஜா அதிக சிரமப்படுவதால், மருத்துவமனை, கடைவீதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, தான் வளர்க்கும் கால்நடையான எருமை மாட்டின் மீது பயணம் செய்து தனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறார்.