தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 10:21 PM IST

ETV Bharat / state

கிணத்துக்கடவு மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் மீது பேட்டரி கார் மோதி விபத்து; பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு!

A battery car collided with an ambulance in Kinathukadavu flyover: கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் மீது பேட்டரி கார் மோதிய விபத்தில், ஆம்புலன்ஸ் தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் கார் ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினர்.

A battery car collided with an ambulance in Kinathukadavu flyover
கோவை கிணத்துக்கடவு மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் மீது பேட்டரி கார் மோதி விபத்து

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில், கிணத்துக்கடவு வழியாக கோவை - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில், இன்று‌ (மார்ச் 2) இரவு உடுமலையிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் கோவை மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் உடுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

இந்த ஆம்புலன்ஸை ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (22) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், ஆம்புலன்ஸ் கிணத்துக்கடவு மேம்பாலத்தில் ஏறியபோது, அந்த பகுதியில் இருசக்கர வாகனத்திலிருந்து ஒரு நபர் தவறி கீழே விழுந்ததைக் கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர், பின்னோக்கி வந்து அந்த நபரை மீட்க வந்துள்ளார்.

அப்போது, கோகுல் (28) என்பவர் ஓட்டி வந்த பேட்டரி கார், எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸின் பின்பக்கம் பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸும், பேட்டரி காரும் மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்டது. இதில், ஆம்புலன்சில் உள்ள பெட்ரோல் டேங்க் உடைந்து கீழே சிந்தியதால். ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத் குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். அதேபோல், பேட்டரி காரை இயக்கி வந்த நபரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், விபத்தின் போது ஏர்பேக் விரிவடைந்ததால் பேட்டரி கார் தலைகீழாக கவிழ்ந்த போதும் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இந்த விபத்து சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, மேம்பாலத்தில் எரிந்து கிடந்த ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க:மேற்படிப்பு பயில தமிழக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் நியூசிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details