தமிழ்நாடு

tamil nadu

வேட்பாளர்களின் தேர்தல் செலவுத் தொகை அதிகரிப்பு! - தமிழ்நாடு அரசிடம் ரூ.750 கோடி கேட்கும் தேர்தல் ஆணையம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 3:48 PM IST

TN loksabha election expenditure : நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

TN loksabha election expenditure
TN loksabha election expenditure

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மார்ச் 18) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலுக்காக 68 ஆயிரத்து 144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், 90 ஆயிரம் வாக்காளர்கள் டிசம்பர் மாதத்திற்கு பின் சேர்ந்துள்ள நிலையில்,18-19 வயதுடைய வாக்காளர்கள் மொத்தம் 10 லட்சத்து 45 ஆயிரத்து 470 பேர் இருப்பதாகவும் கூறினார்

சி விஜில் செயலி மூலம் நேற்று ஒரே நாளில் 141 புகார்கள் பெறப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக சென்னையில் 21 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சுவர் விளம்பரம் சம்பந்தமான புகார்களே அதிகம் பெறப்பட்டுள்ளன குறிப்பிட்டார்.

தேர்தல் செலவு எவ்வளவு?: மேலும், மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலின் படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்ததாகவும், ஆனால் தற்போது அதிகமானோர் பெயர் பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என கேட்டதன் அடிப்படையில் அதன் எண்ணிக்கை 6.22 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இதில் பெயர் நீக்கத்திற்கான மனுக்களை பரிசீலித்த பிறகு மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் விளம்பரம் தொடர்பாக கட்சிகள் சான்றிதழ் பெற வேண்டும். அது தொடர்பாக இதுவரை 18 சான்றிதழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் என்ற அளவில் இருந்தது. தற்போது இதுவரை 58 பேர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், செலவின பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. பொது பார்வையாளர்கள் வேட்புமனு பரிசீலனைக்கு ஒரு நாள் முன்னதாக வருகை தருவார்கள்” என தெரிவித்தார்.

மேலும், ஒரு சட்டசபைத் தொகுதிக்கு ஒருவர் என்ற விதத்தில் 234 சட்டசபைத் தொகுதிக்கு வீடியோ கண்காணிப்பு குழு நியமிக்கப்படுவார்கள். பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாகனத்திலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அவர்களின் பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்.

உணவு செலவினம்: “இட்லி- 17 ரூபாய், புரோட்டா - 55 ரூபாய் என்று மாவட்ட அளவில் உணவு பொருட்களுக்கு செலவினத்துக்கான தேர்தல் ஆணையம் நிர்ணயத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு இது வேறுபடும். இந்த விலை விவரத்தை ஆலோசித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என குறிப்பிட்டார்.

நாம் தமிழர் கட்சிக்கும் மதிமுகவிற்கும் சின்னம் ஏதும் தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறிய அவர், நட்சத்திர பேச்சாளர்கள் மார்ச் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்து அவர்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரூரில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.19 லட்சம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details