தமிழ்நாடு

tamil nadu

வங்கதேச வன்முறை; 4வது நாளாக சென்னை வந்தடைந்த 42 தமிழக மாணவர்கள்! - Students Rescued in Bangladesh

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 1:16 PM IST

Students Rescued in Bangladesh: வங்கதேசத்தில் இருந்து 4வது நாளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 மாணவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

சென்னை திரும்பிய மாணவர்களுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சென்னை திரும்பிய மாணவர்களுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் மற்றும் கலவரம் நடந்து வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். இந்திய எல்லை அருகே உள்ள நகரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப இயலாத சூழலில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து வங்கதேசத்தில் இருந்து கடந்த 3 நாட்களாக 166 மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில், 4வது நாளாக கிருஷ்ணகிரி, கடலூர், தருமபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 42 மாணவர்கள், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் மூலம் நேற்று நள்ளிரவு (ஜூலை 24) சென்னை வந்தடைந்தனர்.

அவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் வாகனங்கள் மூலம் அனைவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி வங்கதேசத்தில் படிக்க சென்ற 208 தமிழக மாணவர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். கலவரம், போராட்டம் காரணமாக அச்சத்தினால் வர விரும்பக்கூடிய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் கல்வி தடைப்பட்டு வரவில்லை. போராட்டம் காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அங்கு இயவ்புநிலை திரும்பியதும் மீண்டும் அவர்கள் படிக்க செல்லக்கூடும்.

வங்கதேசத்தில் பதற்றநிலை மாறி சகஜ நிலை திரும்புவதாக தகவல்கள் வருகின்றன. பதற்றத்தில் உள்ள மாணவர்களை அழைத்து வர தாய் உள்ளத்துடன் அரசு தயாராக உள்ளது” என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

சென்னை திரும்பிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல நாதன் கூறுகையில், “வங்கதேசத்தில் இருந்து கல்லூரி நிர்வாகம் மூலம் எல்லையை கடந்து வந்தோம். தமிழக அரசின் உதவியால் விமான மூலம் சென்னை வந்தோம். மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மாணவி திவ்யா பிரியா கூறுகையில், “எங்கள் கல்லூரி அருகே கலவரம் நடந்தது. அதனால் கல்லூரி விடுதிக்குள்ளேயே முடங்கி இருந்தோம். வீட்டை தொடர்பு கொள்ள முடியாத நிலை. தமிழ்நாடு அரசு உதவி மையத்தை தொடர்பு கொண்டதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

செங்கல்பட்டைச் சேர்ந்த மாணவரின் தந்தை சவுமியன் கூறுகையில், “வங்கதேசத்தில் இருந்து மாணவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கவ்விக் கட்டணம் அதிகமாக உள்ளது. வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் குறைவாக இருப்பதால் எங்கள் பிள்ளைகளை அங்கு படிக்க வைக்கிறோம்” என்று அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:2026 சட்டமன்ற தேர்தல்: வியூகம் வகுக்கும் திமுக மாணவர் மற்றும் மகளிர் அணி! - DMK Election Coordination Committee

ABOUT THE AUTHOR

...view details