தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் 400 ஆண்டுகள் பழமையான வேணாடு சேரர் நாணயம் கண்டெடுப்பு! - VENAD CHERA COPPER COIN

சிவகங்கையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்பாலான வேணாடு சேரர் ஆட்சிக்கால நாணயம் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் கண்டெடுக்கப்பட்ட வேணாடு சேரர் நாணயம்
சிவகங்கையில் கண்டெடுக்கப்பட்ட வேணாடு சேரர் நாணயம் (ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 5:23 PM IST

சிவகங்கை: சிவகங்கை அருகே 'ச' என்ற தமிழ் எழுத்தும், அமர்ந்த நிலையில் மனித உருவமும், கீழ்ப்பகுதியில் பத்து புள்ளிகளுடன் கொண்ட சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்பாலான வேணாடு சேரர் ஆட்சிக்கால நாணயம் (காசுகள்) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செப்பு நாணயம் ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதே போன்ற நாணயம் மானாமதுரை பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா கூறியதாவது, “ சிவகங்கையில் மன்னர் மேல்நிலைப்பள்ளிக்கும், செட்டி ஊரணி கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் தரை மேற்பரப்பில் இந்தக் காசு கண்டெடுக்கப்பட்டது. சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை இன்றைய தமிழக பகுதிகளில் சேரர் ஆட்சி நடைபெற்றுள்ளது. கருவூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கரூரை தலைநகராகக் கொண்டு சேரர்கள் ஆண்டு வந்துள்ளனர்.

12 ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியையும் சேர்த்து வேணாடு அமைந்துள்ளது. வேணாட்டை ஆட்சி செய்தவர்கள் பல்வேறுபட்ட நாணயங்களை வெளியிட்டுள்ளனர். வீர கேரளன், கோதை ரவி, உதயமார்த்தாண்டன் போன்ற அரசர்கள் நாகரி எழுத்துப் பொறித்த காசுகளை வெளியிட்டுள்ளனர். பூதல வீரராமன், பூதல சேரகுலராமன், இராமாராசா போன்ற தமிழ் எழுத்துப் பொறிப்புகள் உள்ள காசுகளும் கிடைத்துள்ளன.

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா (ETV Bharat TamilNadu)

ஓரெழுத்து காசுகள்: 'ச' என்ற ஓரெழுத்து மட்டுமே பொறிக்கப்பட்ட காசுகளும், மா, செ என்ற ஓரெழுத்துகள் மட்டும் பொறிக்கப்பட்ட காசுகளும் இவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.

சிவகங்கையில் கிடைத்த வேணாட்டு சேரர் காசு:

சிவகங்கையில் கிடைக்கப்பெற்ற காசின் இரண்டு பக்கங்களிலும் மனித உருவம் காணப்படுகிறது. ஒரு பக்கம் நின்ற நிலையில் அவ்வுருவம் காணப்படுகிறது. அதற்கு அருகில் மங்கலச் சின்னமான குத்துவிளக்கும், வலது கை பக்கத்தில் ஆறு புள்ளிகளும், இடதுகை பக்கத்தில் சில புள்ளிகளும் அந்த நாணயத்தில் காணப்படுகின்றன.

காசின் மற்றொரு பக்கத்தில் அமர்ந்த நிலையில் மனித உருவமும், அவ்வுருவத்தின் இடது பக்கத்தில் 'ச' என்ற தமிழ் எழுத்தும், கீழ்ப்பகுதியில் பத்து புள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நாணயம் செம்பால் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 2.5 கிராம் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:மருங்கூர் அகழாய்வுத்தளத்தில் கிடைத்த உடைந்த இரும்பு கத்தி!

நாணயத்தின் காலம்:

வேணாட்டு சேரர்கள் 12ஆம் நூற்றாண்டில் இருந்து 16ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்தில் அவர்கள் பல்வேறு காசுகளை வெளியிட்டுள்ளனர். மன்னர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள காசுகளைத் தவிர மற்ற காசுகளில் மன்னர் பெயர், காலம் தெரியவில்லை. இவை வேணாட்டு சேரர் காசு என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றன. நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் இவ்வகை காசுகள் கிடைத்துள்ளன. இவ்வகைக் காசு சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையிலும் கிடைக்கப் பெற்றுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இக்காசு குறித்து மேலாய்வில் நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமன் கூறுகையில், “ஆங்கிலேயர்களால் இவ்வகைக் காசுகள் பாண்டியர் காசு என்று அடையாளப்படுத்தப்பட்டன. பின்னர் போதிய கல்வெட்டு சான்றாதாரங்களுடன் வேணாட்டு சேரர் காசு என அடையாளப்படுத்தப்படுகிறது. சேர நாட்டு பகுதியில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் வணிகத் தொடர்பால் இக்காசு இப்பகுதிக்கு வந்திருக்கலாம். இக்காசு கிடைத்ததில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அரசனேரி கீழ மேடு பகுதியில் 17ஆம் நூற்றாண்டு பிஜப்பூர் சுல்தான்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று காசுகள் சிவகங்கை பகுதியில் கிடைத்துள்ளது. இதனை சிவகங்கை தொல்நடைக்குழு அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details