சென்னை :17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.23) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மைதானத்தில் நடைபெறும் 39வது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் இடையேயான இரண்டாவது மோதல் இதுவாகும். இதற்கு முந்தைய போட்டி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற அந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளும் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முறையே 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி நான்காவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் நடந்துள்ளன.
அதில் சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. அதேசமயம் லக்னோ அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. தொடரில் தொடர இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார்.