பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நிறைவுபெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து 117 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.இறுதியில் இந்தியாவிற்கு 5 வெண்கலம் 1 வெள்ளி என மொத்தமாக 6 பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் 71வது இடம் பிடித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை வென்றது இந்தியா. இதன் மூலம் 48வது இடத்தை பிடித்தது. இந்தநிலையில் இம்முறை அந்த எண்ணிக்கையைக் கடந்து என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடைபெறவில்லை.
துப்பாக்கி சுடுதலில் இந்தியா சார்பில் 21 பேர் களமிறங்கினர். இதனால் இந்தியாவுக்கு மூன்று பதக்கம் கிடைத்தது. மனு பாக்கர் (தனிநபர், கலப்பு இரட்டையர்), சரப்ஜோத், ஸ்வப்னில் வெண்கலம் வென்று அசத்தினர்.
ஒலிம்பிக்கில் எந்த ஒரு விளையாட்டிலும் ஒரே முறையில் இந்தியா, இதுபோல 3 பதக்கம் வெல்வது இதே முதல் முறையாகும். ஈட்டி எறிதலில் பொருதும் எதிர்பார்க்கப்பட்ட 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா, இம்முறை வெள்ளி வென்றார்.
ஹாக்கி அணி வீரர்கள் அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். அதே போல் தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலே மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், பதக்கம் வென்று அசத்தினார்.
நூலிழையில் பறிபோன 6 பதக்கம்?இந்திய அணி பல பிரிவுகளில் நெருக்கமாக சென்று பதக்கங்களைத் தவறவிட்டுள்ளது. அந்த வகையில் 25 மீ. பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் மனுபாக்கர் ஒரு புள்ளி வித்தியாசத்தில் நான்காவது இடம் பிடித்து ஹாட்ரிக் பதக்க சாதனையை தவறவிட்டார்.
துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணி பிரிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்திய அணி வெண்கலத்தைத் தவறவிட்டது. மேலும் 10 மீ ஏர் ரைபிளில் அர்ஜூன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் நான்காமிடம் பிடித்தார். ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பெருமை பெற்ற லக்சயா சென், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தோற்று அதிர்ச்சி கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு கிலோ வித்தியாசத்தில் பளு தூக்குதல் வீராங்கனை மீரா பாய், வில்வித்தை கலப்பு அணி பிரிவில் தீரஜ், அங்கிதா இணை 2-6 என்ற கணக்கில் வெண்கல பதக்கத்தை இழந்தது என ஆறு போட்டிகளில் இந்தியா நான்காமிடத்தில் நிறைவு செய்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு நூலிலையில் 6 பதக்கம் பறிபோனது. ஒரு வேளை அந்த போட்டிகளில் பதக்கம் வென்று இருந்தால், இந்தியாவின் இரட்டை இலக்க பதக்க கனவை நனவாக்கி இருக்கும்.
செய்ய வேண்டியது என்ன?பதக்க பட்டியலில் அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும், ஆஸ்திரேலியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது இந்த நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
அதாவது சீனா தவிர இந்தியாவை விடக் குறைந்த அளவில் மக்கள் தொகை நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து அதிகமான வீரர்களை அனுப்ப முடியாதா? என பலருக்குக் கேள்வி எழலாம்.
ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள அத்தனை விளையாட்டுக்களையும் ஆர்வத்துடன் விளையாட இந்தியாவில் பல வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான உரிய பயிற்சியும், ஒலிம்பிக் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் நடைபெற உள்ளது. அப்போது நம் இந்திய வீரர்கள் இரட்டை இலக்க பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 2024: வினேஷ் போகத் தகுதி நீக்கம் முதல் பதக்க பட்டியலில் முன்னேறிய பாகிஸ்தான் வரை.. முக்கிய நிகழ்வுகள்!