தமிழ்நாடு

tamil nadu

ஆல் ரவுண்டராக மிரட்டிய அஸ்வின்.. திருப்பூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது திண்டுக்கல்! - TNPL 2024

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 7:39 AM IST

ITT vs DD T20 Qualifier 2: டிஎன்பில் 2024 தொடரின், குவாலிபையர் 2 போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

இரு அணி வீரர்கள்
இரு அணி வீரர்கள் (Credit - TNPL 2024)

சென்னை:டிஎன்பில் (TNPL 2024) என்று அழைக்கப்படக்கூடிய தமிழ்நாடு பிரீமியர் லீக் கடந்த மாதம் 5ஆம் தேதி சேலத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று குவாலிஃபையர் 2வது போட்டி நடைபெற்றது. இதில், லைகா கோவை கிங்ஸியிடம் குவாலிஃபையர் 1ல் தோல்வியைத் தழுவிய திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸை நாக்-அவுட் சுற்றில் வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணி, திண்டுக்கல்லின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பாஃப்னா 26 ரன்களும், எஸ்.கணேஷ் 17 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். திண்டுக்கல் அணியின் பௌலிங்கைப் பொறுத்தவரை இளம் வீரர் பி.விக்னேஷ் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3விக்கெட்களைக் கைப்பற்றினார். அதோடு தமிழ்நாடு பிரீமியர் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சை இந்த போட்டியில் பதிவு செய்தார்.

நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தியும் வேகப்பந்து வீச்சாளர் சுபோத் பாட்டீயும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணி நிர்ணயித்த 109 என்ற எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கியது திண்டுக்கல் அணி. முதல் விக்கெட்டிற்கு இளம்வீரர் விமல் குமார் (28) மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைந்து 81 ரன்கள் சேர்த்தனர்.

மேலும், தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய அஸ்வின் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி திருப்பூரின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். வெறும் 25 பந்துகளில் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது 3வது அரைசதத்தைப் பதிவு செய்ததோடு, திண்டுக்கல் அணி 10.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலக்கை அடைய பெரும் உதவியாக இருந்தார்.

மேலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல், ௩௦ பந்துகளில் 69 ரன்கள் அடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியுடன் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 8வது நாளில் இந்தியா பதக்கம் வெல்லுமா? முழு விபரம்!

ABOUT THE AUTHOR

...view details