நாட்டின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், 2025-2026 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சனிக்கிழமை (பிப்.1) தாக்கல் செய்தார். பட்ஜெட் தினத்தில் நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதை போல, அவர் உடுத்தும் புடவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த சேலைகளின் விவரம் பின்வருமாறு:
மத்திய பட்ஜெட் 2025:தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். சிவப்பு ரவிக்கை மற்றும் தங்க நிற பார்டர் கூடிய சேலை அனைவராலும் கவனிக்கப்பட்டது. இந்த புடவை 2021ம் ஆண்டு் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி, நிர்மலா சீதாராமனுக்கு பரிசாக வழங்கியதோடு, பட்ஜெட் தினத்தன்று இதனை உடுத்திக்கொள்ளுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட் 2024:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ஆறாவது மத்திய பட்ஜெட்டை (இடைக்கால பட்ஜெட்) தாக்கல் செய்வதற்கு, நீலம் மற்றும் க்ரீம் நிறம் கலந்த டஸ்ஸார் புடவையில் வருகை புரிந்தார். இந்த நீல நிறப் புடவை முழுவதிலும் கிரீம் நிற 'காந்தா தையல்' வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் திரிபுராவில் காந்தா புடவைகள் பாரம்பரியமாக காணப்படுகிறது.
அப்பகுதிப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக, அவர்களின் பாரம்பரிய உடையான காந்தா தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சேலையில் இன்று நிர்மலா சீதாராமன் வந்தார். மோடி அரசின் மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் ஜூலை 23, 2024ல் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த நிர்மலா சீதாராமன் பிங்க் ரவிக்கை மற்றும் பிங்க் பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவையை அணிந்திருந்தார். இது நிர்மலா சீதாராமனின் 7வது பட்ஜெட் தாக்கலாக இருந்தது.
மத்திய பட்ஜெட் 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஐந்தாவது பட்ஜெட் தாக்கலில், கருப்பு நிற பார்டர் மற்றும் தங்க நிற வேலைப்பாடு கொண்ட வெர்மில்லியன் (vermillion) சிவப்பு பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இந்தப் புடவையானது கர்நாடகாவின் தார்வாட் பகுதியைச் சேர்ந்த கையால் நெய்யப்பட்ட 'இல்கல்' பட்டுப் புடவையாகும். இந்த புடவை அப்போதைய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.