பயிர்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும், முளை கட்டிய பயிர்களை சாப்பிட்டால் பலன் இரு மடங்கு என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், இங்கு பிரச்சனை என்ன வென்றால், பலருக்கும் பயிர்களை எப்படி முளை கட்டுவது என தெரியவில்லை. அதனால், இப்போது பயிர்களை எளிமையான வழியில் எப்படி முளை கட்டுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..
எந்த பயிர்களை முளை கட்டுவதாக இருந்தாலும், ஒரு நாள் முன்னதாகவே அதனை ஊற வைப்பது அவசியம். உதாரணத்திற்கு, இன்று நீங்கள் பயிர்களை முளை கட்டுவதாக இருந்தால், நேற்று படுக்கைக்கு செல்லும் முன் ஒரு கிண்ணத்தில் பயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து வைத்து விடுங்கள்.
முறை 1:உதாரணத்திற்கு நீங்கள் காரமணி அல்லது தட்டப்பயிரை ஊறவைத்திருந்தால், அந்த தண்ணீரை நன்றாக வடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர், ஒரு ஹாட் பாக்சில் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து அதனுடன் நாம் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள காரமணியை சேர்த்து விடுங்கள்.
பின்னர், 1 நிமிடத்திற்கு பின்னர், ஹாட்பாக்சில் இருந்த வெதுவெதுப்பான நீரை கீழே ஊற்றிவிட்டு ஹாட் பாக்ஸை மூடி வைத்து அடுத்த நாள் காலை திறந்து பார்த்தால், பயிர் நன்றாக முளை விட்டிருக்கும். இந்த முறை, குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு சிறந்தது.
முறை 2:நீங்கள் வேர்கடலையை ஊற வைத்து எடுத்து வைத்திருந்தால், ஒரு ஈரமான வெள்ளை துணியில் இந்த கடலையை சேர்த்து கட்டி ஒர் தட்டு அல்லது பாத்திரத்தில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை திறந்து பார்த்தால் சத்தான முளை கட்டிய பயிர் கிடைத்துவிடும்.
முறை 3:ஒரு பாத்திரம் மீது வடிக்கட்டியை வைத்து அதில், நீங்கள் ஊற வைத்திருந்த பச்சை பயிரை சேர்த்து வெள்ளை துணியால் மூடிவிடுங்கள். பின்னர், வெள்ளை துணியில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து வந்தால் பயிர் வேகமாக முளை விடும்.
முறை 4: நீங்கள், கொள்ளு பயிரை ஊற வைத்திருந்தால், அதனை நன்றாக வடிக்கட்டிய பின்னர் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு முழுமையாக மூடாமல், காற்று புகும் அளவிற்கு இடவெளி விட்டு மூடி வைத்து விடுங்கள். காலையில் முளை கட்டிய பயிர் ரெடியாகிவிடும்.