தமிழ்நாடு

tamil nadu

பார்வையிழப்பால் வாடும் 60% குழந்தைகள்..விழி கொடுத்து ஒளி ஏற்ற வலியுறுத்தும் தேசிய கண் தான இரு வார விழா! - National Eye Donation Fortnight

By ETV Bharat Health Team

Published : Aug 24, 2024, 4:39 PM IST

Updated : Aug 25, 2024, 6:00 AM IST

National Eye Donation Fortnight 2024: இந்தியாவில் சுமார் 1.1 மில்லியன் நபர்கள் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 60% பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit -ETVBharat)

சென்னை:மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை 'தேசிய கண் தான இரு வார விழா'வாக (National Eye Donation Fortnight 2024) அறிவித்து கடைபிடித்து வருகின்றனர்.

குறிப்பாக, கண் தானம் தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் அச்சங்களை அகற்றும் நோக்கத்துடனும் மரணத்திற்குப் பின் கண் தானம் செய்யப்படுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழா அனுசரிக்கப்படுகிறது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கண் தானம் செய்துள்ளதை மரியாதை செலுத்தும் விதமாக இந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் கண் வங்கியை நிறுவிய சென்னை மருத்துவர்: 1948ம் ஆண்டு டாக்டர் ஆர்.இ.எஸ் முத்தையாவால் இந்தியாவின் முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், 1945ம் ஆண்டு டாக்டர் முத்தையாவால் சென்னையில் உள்ள மண்டல கண் மருத்துவ இயல் நிலையத்தில் (Regional Institute of Ophthalmology) நாட்டின் முதல் கண் வங்கி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கண் வங்கி தொடங்கப்பட்டது முதல், கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 1960 ஆம் ஆண்டில் இந்தூரில் உள்ள பேராசிரியர் ஆர்.பி.தண்டா என்பவரால் முதன்முதலில் வெற்றிகரமாக கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

கண் தானம் செய்தவர்கள் எண்ணிக்கை: தேசிய சுகாதார நிறுவனத்தின் (National Institutes of Health) 2023ம் ஆண்டின் அறிக்கை அடிப்படையில், இது வரை 740 நபர்கள் இந்திய கண் வங்கி சங்கத்தின் கீழ் கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக, 2017-2018 ஆம் ஆண்டில் 71,700 நன்கொடையாளர்களின் கண்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

22% முதல் 28% சதவீத மக்கள் தன்னார்வத்தில் கண் தானம் செய்ய வருவதாகவும் 50 % மக்கள் மருத்துவமனையில் நடத்தப்படும் கார்னியல் மீட்டெடுப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வால் கண் தானம் செய்கின்றனர்.

பார்வையிழப்பு:பார்வையிழப்பிற்கு கார்னியல் மாற்று அறுவை சிகிச்சையே ஒரே தீர்வாக இருப்பதாக கண் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சுமார் 1.1 மில்லியன் நபர்கள் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 60 % பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

கண் தானம் விகிதம்:2017-2018 காலகட்டத்தில், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு சுமார் 29 பேர் கண் தானம் செய்துள்ளனர் என ஆய்வு தெரிவிக்கிறது.

மோசமான கட்டமைப்பு: உலகிலேயே இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான கண் வங்கிகள் இருப்பதாகவும் ஆனால் அவை அனைத்தும் மோசமான உள்கட்டமைப்போடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தேவையுடன் ஒப்பிடுகையில் பலமடங்கு குறைவாகவே உள்ளது.

மத்திய அரசின் முன்னெடுப்பு:கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சிறப்பு திட்டங்களை தொடங்கியுள்ளது. அவை,

  • தேசிய கண்தான இருவார விழா (National eye donation fortnight)
  • குருட்டுத்தன்மை மற்றும் பார்வைக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம் (National Programme for Control of Blindness and Visual Impairment)
  • இந்திய கண் வங்கி சங்கம் (EBAI)
  • மத்திய மோட்டார் வாகன சட்டம் (Central Motor Vehicles Act)

இறந்த பின்னர் மண்ணுடன் மண்ணாக மக்கி போகும் நம் உடல் உறுப்புகளை, மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம், நாம் இறந்தும் பலருக்கு வாழ்க்கை கொடுக்க முடிகிறது. அனைவரும் கண்தானம் செய்வோம் என்பதை உறுதியளிக்க வேண்டும் என்பதை தேசிய கண் தான இரு வார விழா வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க:

கண் தானம் இவர்கள் எல்லாம் செய்யக்கூடாதா?...பரவும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி!

சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் சுவாசப் பிரச்சனை! அச்சுறுத்தும் PM 2.5 - air pollution

Last Updated : Aug 25, 2024, 6:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details