தமிழ்நாடு

tamil nadu

சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது.. அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் பேச்சு! - Seeman on Annapoorna Srinivasan

By ETV Bharat Entertainment Team

Published : Sep 13, 2024, 3:23 PM IST

Seeman on Annapoorna Srinivasan: கோவை அன்னபூர்ணா சீனிவாசன் எழுப்பிய கேள்வி நியாயம் என்பது நாடெங்கும் பரவி உள்ளது என கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதனை அதிகாரம் பணிய வைக்கிறது என விமர்சித்தார்.

சீமான் மற்றும் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த அன்னபூர்ணா சீனிவாசன்
சீமான் மற்றும் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த அன்னபூர்ணா சீனிவாசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இரா சரவணன் தமிழில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கியவர். இவர் தற்போது சசிகுமார் நடித்துள்ள நந்தன் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ருதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வருகிற 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சசிகுமார், இரா சரவணன் ஆகிய படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் எச்.வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதனையடுத்து விழா மேடையில் பேசிய சீமான், “பல நூறு ஆண்டுகளாக இம்மண்ணின் மக்கள் பட்ட வலியை வெளியிடும் விழாவாக இதை பார்க்க வேண்டும். இசையால் உலகின் எல்லா துயரையும் போக்க முடியும். நந்தன் வெளியிடுகிற இசை இறைவனைக் காண அல்ல, நல்ல மனிதனைக் காண. நந்தன் இசை இதயத்தை தடவப் போவதில்லை பேரளவில் தாக்கும். மாட்டுத்தோல் பறை இசை அல்ல மனிதனின் தோலால் உருவான இசை. ஜிப்ரானுக்கு பாராட்டுக்கள்.

பாலாஜி சக்திவேல் கதாபாத்திரம் மொத்த படத்தையும் தாங்குகிறது. பின்னணி இசையில் ஒரு படத்தை தூக்கி நிறுத்தும் ஒரே ஆள் இளையராஜா தான். அவருக்குப் பிறகு தற்போது இளம் இசை அமைப்பாளர்கள் வந்துவிட்டனர். படத்தைப் பார்த்து எனது மனைவி அழுது விட்டார். நம்மைப் போன்ற சக மனிதர்கள் எப்படி நசுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது. நான் ஏழை என்பதை மாற்றிவிடலாம், ஆனால் சாதியை எங்கு சென்றாலும் மாற்ற முடியாது. நாட்டின் குடியரசுத் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் யோசித்து பாருங்கள்.

இப்போதும் பொதுத் தொகுதி தரக்கூடாது என்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமுத்திரக்கனி கதாபாத்திரம் நான் செய்திருக்க கூடாதா என்று தோன்றியது. தெலுங்கில் எந்த படத்தைப் பார்த்தாலும் சமுத்திரக்கனி இருக்கிறார். பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட வாக்காளர்களை நான் நிறுத்திய தொகுதிகளில் எனக்கு வாக்கு அதிகம் கிடைத்துள்ளது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கேள்வி கேட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, “அவர் கேள்வியில் இருந்த உண்மை உங்களுக்கு தெரியும். ஜிஎஸ்டி வரியால் மக்களும், வர்த்தகர்களும் எவ்வளவு பாதிக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியும். அவரது கேள்வி நியாயம் என்பது நாடெங்கும் பரவி உள்ளது, அதனை அதிகாரம் பணிய வைக்கிறது. அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவித்தாலும் அவரது கேள்வியில் உள்ள உண்மையை, சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது.

திமுக மதுவை ஒழித்துவிட்டு வரட்டும். மதுவை ஒழித்துவிட்டால் திமுகவே இருந்துட்டு போகட்டும். பத்து லட்சம் கோடி வந்துள்ளதாக சொன்னார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் வந்துள்ளதா? என் நாட்டை விற்பதை நான் எதிர்க்கிறேன்” என்று பேசினார்.

இதையும் படிங்க:ஆண்கள் அடிமையாக இருக்க முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் - இயக்குநர் சீனு ராமசாமி

ABOUT THE AUTHOR

...view details