தமிழ்நாடு

tamil nadu

நடிகர்‌ சங்க கட்டிடம் கட்ட கடனாக இல்லாமல் ரூ.1 கோடி வழங்கிய விஜய்..கார்த்தி பெருமிதம்! - Actor Karthi

By ETV Bharat Entertainment Team

Published : Sep 8, 2024, 2:11 PM IST

Updated : Sep 8, 2024, 7:35 PM IST

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் சேர்ந்து நடிப்பதாக உறுதி அளித்துள்ளனர் எனவும், நடிகர்‌ சங்க கட்டிடம் கட்ட விஜய் கடனாக இல்லாமல் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளதாகவும் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி பெருமிதத்துடன் கூறினார்.

நடிகர் சங்க பொதுக்குழுவில் கார்த்தி உள்ளிட்டோர்
நடிகர் சங்க பொதுக்குழுவில் கார்த்தி உள்ளிட்டோர் (Image Credit - ETV Bharat Tamilnadu)

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. முன்னதாக செயற்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது பொதுக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் மன்சூர் அலிகான், ஸ்ரீமன், கோவை சரளா, சார்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி (Video Credit - ETV Bharat Tamilnadu)

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, "நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவது நின்றதன் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து சுமையை கூடுதலாக அதிகரித்துள்ளது. சென்னையில் எந்த திருமணம் மண்டபத்தில் இல்லாத அளவில் நடிகர் சங்க கட்டிடத்தில் 100 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளது.

வங்கியில் கடன் பெறுவதற்கு 50 சதவீதம் வைப்பு நிதி வைக்க வங்கி வலியுறுத்தவும், அதனை திரட்டுவதற்கு 4 மாதம் ஆனது. வருகிற மார்ச் மாதத்திற்குள் கட்டிட பணி முடிவு பெறும் என்று தெரிவித்துள்ளனர்.நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் சங்கத்திற்கு கொடுத்தார். நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் சேர்ந்து கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பல்வேறு செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். தனுஷ் தொடர்பான கேள்விக்கு எங்கள் தரப்பில் இருந்து பதில் அளித்துள்ளோம். அவர்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாமல் முடிவு எடுக்க வேண்டும். பல நடிகர்கள் இங்கு வராதது ஒரு பிரச்சினையாக இல்லை நாம் எப்போது உதவி என்று கேட்டாலும் அவர்கள் நமக்காக உதவி செய்வார்கள்.

பெண்களுக்கான அச்சுறுத்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைத்துள்ளோம். அதற்கான உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் தைரியமாக அந்த குழுவில் சொல்லுங்கள்" என்று கார்த்தி கூறினார்.

முன்னதாக கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாக கமிட்டியின் கூட்டம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

இந்த கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்தும் பொதுக் குழுவில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் சங்க கட்டிட பணிகள் நிறைவடையாத நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்க நடிகர் சங்கம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்ததும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரன்வீர் -தீபிகா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை! - Deepika Padukone Baby Girl

Last Updated : Sep 8, 2024, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details